தமிழ்நாடு

தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு

  தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்
அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அங்கு சென்று கொண்டிருக்கிறேன்.

இளைஞர் மரணத்தால் அதிர்ச்சி

தமிழகத்தை பொறுத்தவரையில் மிக வருத்தமாக இருக்கிறது காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும்பொழுது சாத்தான்குளத்தில் நடந்த கொலைக்கு கனிமொழி இறந்தவரின் வீட்டிற்கு சென்றார்.

திமுக முன்னிறுத்தி தமிழகம் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இப்போது இவர்கள் ஆட்சி காலத்தில் சிவகங்கை நடந்தது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இதை பார்க்கும்பொழுது தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என நம்மால் கணிக்க முடியவில்லை.

திமுகவினர் செய்தால் மூடி மறைக்கிறார்கள்

எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரும் குரல் எழுப்பிய பிறகு தான் அண்ணன் ஸ்டாலின் மெதுவாக வெளியே வந்து பதில் கூறுகிறார். இதுவரையில் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். திமுகவை சேர்ந்தவர்கள் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது.

காலையில் பேப்பரை திறந்தாலே வியாபாரியின் விரலை வெட்டிருக்கிறார்கள். பெட்ரோல் பங்க் அதிகாரி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என சட்டம் ஒழுங்கை வைத்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என தெரியவில்லை.

ஏழைகளின் உயிர் மலிவு

உதயநிதி ஸ்டாலின் கூறும்போது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் திராவிட மாடல் சிறந்தது என தெரிவித்துக்கொண்டிருக்கிறோம் எனக் கூறுகிறார். இது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல எனவும் கூறுகிறார்.நாங்களும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இங்கு ஏழைகளின் மனித உயிர் அவ்வளவு எளிதாக போய்விட்டது.

ஒரு காவலாளியின் உயிர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறது. இது மிக, மிக வேதனை அளிக்க கூடிய செயல். பெண்களின் மானம் மலிவாகி போய்விட்டது, ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது. இதுதான் திராவிட மாடலின் மிக வேதனையான வெளிப்பாடு என்பதை நான் வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுகவிடம் கேட்க வேண்டியது தானே?

அமித்ஷா வந்து சென்றால் தமிழகத்தில் உள்ள கட்சிகளில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. இப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் குழப்பத்திற்கும் அதுதான் காரணம் என ஆர்.எஸ்.பாரதி கூறியது குறித்து கேட்டபோது, பாமக பிரச்சனைக்கும் அமித்ஷாவிற்கும் என்ன சம்பந்தம். இதிலிருந்து ஆர்.எஸ். பாரதி மற்றும் திமுக அமித்ஷாவை பார்த்து எந்த அளவிற்கு பயந்து போய் இருக்கிறார்கள் என தெரிகிறது. அமித்ஷா அவர்களை தரைக்குறைவாக பேசியதற்கு ஒரு ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. அதில் நான் மனதளவில் கலந்து கொள்கிறேன்
அமித்ஷாவை பார்த்து திமுகவினர் கிளி பிடித்து போய் இருக்கிறார்கள். பாஜக எல்லோரையும் கபளிகரம் செய்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். இவர்கள் தான் அடங்கி போயிருக்கிறார்கள். திமுக தான் இவர்களை கபளிகரம் செய்கிறது.

காங்கிரஸ் அடங்கி போயிருக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா? என எட்டு எட்டிப்பார்க்கிறார்கள்.எதையும் தேட வேண்டாம். எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறும் என தெரிவித்துக்கொள்கிறேன். திருமாவளவன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்பார். துணை முதல்வர் பதவிக்கு ஆசை இல்லை என்பார். அவர்களுக்கு அது சாத்தியமில்லை. பாஜகவை பொறுத்தவரையில் எங்கள் கட்சியின் தலைவர்கள் தலித்துகளாக இருந்துள்ளார்கள். இதே கேள்வியை திமுகவிடம் கேட்க வேண்டியதுதானே அவர்கள் ஏன் அவர்கள் மக்களின் உரிமை விட்டுக்கொடுக்கிறார்கள்.

திமுக கூட்டணி தான் அடிமை கூட்டணி

பிரதமரை பற்றி பேசுவதற்கு முன்னால், பட்டியலின சகோதரர் தமிழகத்தில் முதலமைச்சர் ஆக இந்தியா கூட்டணியில் வர முடியுமா? வருவதற்கு ஏன் உரிமை போராட்டத்தை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு கோரிக்கையை ஏன் வைக்கக்கூடாது. எதிர் கூட்டணியில் யார் முதலமைச்சர் என கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே தைரியமாக கேட்க வேண்டியதுதானே?

தமிழகத்தில் சமூக நீதி பற்றி பேசி இவர்கள் ஒரு பட்டியலின சகோதரர் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால் திருமாவளவனுக்கு பயம் மற்ற கூட்டணியை பார்த்து அடிமை கூட்டணி என்று எனக் கூறுகிறார்கள். திமுக கூட்டணி தான் அடிமை கூட்டணி என காட்டமாக தமிழிசை தெரிவித்தார்.