தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்- பரமத்தி வேலூரில் பரபரப்பு

சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்- பரமத்தி வேலூரில் பரபரப்பு
மூதாட்டி கொலை செய்யப்பட்ட வீட்டில் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (67). இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி தனியார் நிறுவனத்தில் குடும்பத்துடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் கிருஷ்ணவேணி திருமணம் செய்து மணியனூரில் வசித்து வருகிறார்.

நகை, பணம் கேட்டு மிரட்டல்

இந்நிலையில் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டு மூதாட்டி சாமியாத்தாள் மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று மாலை உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு இரவு சுமார் 9 மணிக்கு வீட்டிற்கு வந்த மூதாட்டி சாமியாத்தாள் வீட்டின் வெளியே வாசலில் கட்டிலில் படுத்து உறங்கியதாக தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில் நள்ளிரவில் வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் மூதாட்டி இடம் வீட்டைத் திறந்து நகை பணத்தை எடுத்துக் கொடுக்கும்படி மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மூதாட்டி சம்பவ இடத்தில் சத்தம் போட்டு கூச்சல் விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மூதாட்டி கொலை

இந்நிலையில் மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்து, வாய், முகம் பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டதாகவும், இதனை தொடர்ந்து மூதாட்டியே அவரது செல்போன் மூலம் பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு அழைத்து திருடர்கள் தன்னை குத்திவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.இதனை அடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சாமியாத்தால் பரிதாபமாக உயிரிழந்தார் என சொல்லபடும் நிலையில் சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி இடம் பணம் நகைக்காக குத்திக்கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் சேலம் சரக டிஐஜி உமா ஆகியோர் சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.