தமிழ்நாடு

வாகன விபத்து: சிறுமி மீது ஏறி இறங்கிய லாரி.. தாய் கண்முன்னே உயிரிழந்த மகள்!

தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமி மீது, தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்து: சிறுமி மீது ஏறி இறங்கிய லாரி.. தாய் கண்முன்னே உயிரிழந்த மகள்!
சிறுமி மீது ஏறி இறங்கிய லாரி.. தாய் கண்முன்னே உயிரிழந்த மகள்!

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு ஸ்ரீகாலனி பகுதியை சேர்ந்தவர் யாமினி. இவரது மகள் சௌமியா ( வயது 10) புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை யாமினி வழக்கம் போல் தனது மகள் சௌமியாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பேப்பர் மில்ஸ் சாலை, வால்கிங்சர் சாலை சந்திப்பு (வீனஸ் மார்கெட்) அருகே வரும்போது முன்னாள் சென்ற வாகனம் திடீரென பிரேக் பிடித்ததால் யாமினி அந்த வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக சடன் பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்னால் அமர்ந்து சென்ற சிறுமி சௌமியா தவறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமி மீது ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண் முன்னே மகள் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததை பார்த்து தாய் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவயிடத்திற்கு சென்று சிறுமி சௌமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.