சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசின் பங்களிப்பான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் மட்டுமின்றி, திட்டத்துக்கான 33 ஆயிரத்து 593 கோடி ரூபாய் கடனுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்தியஅரசின் பங்களிப்பு, கடன் உதவி பெற்றுத் தருவதன் மூலம், திட்டத்தின் 65 சதவீத நிதியை மத்திய அரசே ஏற்பாடு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டு செலவுக்கு மாநிலஅரசு நிதி உதவி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏற்கனவே 32 ஆயிரத்து 548 கோடி ரூபாய் கடன் பெற்று சென்னை மெட்ரோ 2ம் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஒப்புதலால் தமிழ்நாடு அரசின் கடன்கள் மத்திய அரசின் கடன்களாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மொத்த கடனில் 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் சார்புநிலைக் கடன் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நிதி நேரடியாக வழங்கப்படும் எனவும், கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தைச் சார்ந்தது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.