உலகம்

இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? பின்னணி என்ன?

ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? பின்னணி என்ன?
இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? பின்னணி என்ன?
ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், கடந்த 13-ந் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. அதேபோல், ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றை ஏவி தாக்குதலை நடத்தி வருகிறது. டெல் அவிவ்வில் உள்ள இஸ்ரேலின் உள்நாட்டு ராணுவ உளவுத்துறை அமன் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட் தலைமையகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில் வசிக்கும் 3 லட்சத்து 30 ஆயிரம் ஈரான் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 24 போ் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஈரானில் 244 போ் உயிரிழந்ததாகவும், ஆயிரத்து 277 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜி7 மாநாட்டைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பிய டிரம்ப், தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, இஸ்ரேனுடன் இணைந்து ஈரானை தாக்க ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை அமெரிக்காவால் கொல்ல முடியும் என்றும் ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும என்றும் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில் இஸ்ரேலுக்கு ஒருபோதும் கருணை காட்ட முடியாது என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சவுதி, பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, கத்தார், ஓமன், யு.ஏ.இ., ஈராக், பஹ்ரைன் உள்ளிட்ட 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச சட்டங்களுக்கும் ஐ.நா. வழிகாட்டுதல்களுக்கும் எதிராக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.