அரசியல்

இன்று சட்டசபையில்...விஜய் vs  உதய் எகிறும் எதிர்பார்ப்பு! 

தமிழ்நாடு சட்ட்டசபையில் இன்று முதலமைச்சர் துரையின் மானிய கோரிக்கைகள் விவாதிக்க உள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் கேள்விகளுக்கும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விஜய்யின் பதில் எப்படி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சட்டமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது...

இன்று சட்டசபையில்...விஜய் vs  உதய் எகிறும் எதிர்பார்ப்பு! 
cm vijay six department debate
தமிழ்நாடு சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கியது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை, எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர்கல்வித் துறை என மொத்தம் 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 5ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாள், அதாவது 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 7, 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

கடந்த 12ஆம் தேதி நிதியமைச்சர் மரியவில்சன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலுரை வழங்கியதையடுத்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 17ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 18 துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் முடிவடைந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.

மறைந்த மூத்த நடிகை சௌகார் ஜானகி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

முதலமைச்சர் விஜய் பதிலுரை

இன்று விவாதிக்கப்பட உள்ள 6 துறைகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதலமைச்சர் விஜய்யின் வசம் உள்ளது. எனவே, இந்தத் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநீர் திட்டங்கள், நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதால், முதலமைச்சரின் பதிலுரை அரசியல் ரீதியாகவும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய சட்டசபையின் பெரும் எதிர்பார்ப்பு முதலமைச்சர் மானிய கோரிக்கையை எதிர்த்து கேட்கப்படும் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பாரா என்றும், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு விஜய் பதிலடி கொடுப்பாரா என்பதே இன்று அரசியல் வட்டாரத்தில் ட்ரெண்டிங் டாக்...!

புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

இதேபோல் செய்தி மற்றும் விளம்பரத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை விவாதத்தில் ராஜ்மோகன் பங்கேற்று துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்கல்வித் துறையின் சார்பில் பெ. விஸ்வநாதன் பேச உள்ளார். உயர்கல்வி தொடர்பான புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவர் சட்டசபையில் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி, எழுது பொருள் மற்றும் அச்சு உள்ளிட்ட துறைகள் மீதான விவாதங்களும் இன்று நடைபெற உள்ளதால், சட்டசபை கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், இன்று நடைபெறும் 6 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெறுமா, முதலமைச்சர் விஜய் என்ன பதிலளிக்கப் போகிறார், என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்பதே அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.