அரசியல்

பாமகவுக்காக சொத்துகளை விற்றோம்... இன்று கைவிடப்பட்டோம்! – முன்னாள் எம்எல்ஏ அருள்

ராமதாஸை நம்பி அரசியல் பயணம் மேற்கொண்டோம். பல கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். அவர் எங்களை நட்டாற்றில் விட்டுச் சென்றுவிட்டாரோ என்ற பயமும் வேதனையும் இருக்கிறது" என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

பாமகவுக்காக சொத்துகளை விற்றோம்... இன்று கைவிடப்பட்டோம்!  – முன்னாள் எம்எல்ஏ அருள்
2024 டிசம்பரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே வெளிப்படையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களை நீக்கி வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

இந்தச் சூழலில், சேலத்தில் முன்னாள் எம்எல்ஏ அருள் தலைமையில் ராமதாஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருள், "ராமதாஸ் - அன்புமணி சந்திப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பல பொறுப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். அனைவரின் கருத்துகளையும் கேட்டு, சென்னையில் விரைவில் மீண்டும் ஆலோசித்து நல்ல முடிவை எடுப்போம்" என்றார்.

மேலும் அவர், "ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் இணைந்திருந்தால், பாமக அரசியல் ரீதியாக வலுவாக இருந்திருக்கும். கட்சியின் வாக்கு வங்கி குறைந்திருக்காது. 10 முதல் 15 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். எங்களைப் போன்றவர்கள் சொத்துகளை விற்று பல கோடி ரூபாய் கடனில் சிக்கியிருக்க மாட்டோம். அந்த வேதனை இன்னும் எங்களிடம் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

"எங்களுக்கு மாணவர் பருவத்திலிருந்தே ராமதாஸ் மட்டும்தான் தலைவர். இப்போது அவர் எங்களை கைவிட்டுவிட்டாரோ என்ற அச்சம் இருக்கிறது. எங்களின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து இரண்டு நாட்களில் அறிவிப்போம்" என்றும் அருள் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.