சினிமா

என் பயோபிக் உருவானால் அதற்கு இதுதான் பெயர்.. சாய் பல்லவி

தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

என் பயோபிக் உருவானால் அதற்கு இதுதான் பெயர்.. சாய் பல்லவி
sai pallavi about her biopic
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி, தமிழில் கடைசியாக நடித்த 'அமரன்' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'தண்டேல்' படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனையடுத்து நடிகை சாய் பல்லவி தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் ''ராமாயணம்'' படத்தில் சீதையாக நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சாய் பல்லவி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவரிடம், "உங்களது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர்கள்?" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "என்னுடைய வாழ்க்கை படமாக்கினால் 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' (50 Shades of Pallavi) என்று பெயர் வைக்க விரும்புகிறேன்.ஏனெனில் நாம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமாக இருப்போம். நானும் அப்படித்தான்.

நண்பர்களுடன் இருக்கும்போது ஒருவிதமாக இருப்பேன். அதேசமயம் சினிமா துறையில் வேறு விதமாகவும், குடும்பத்தில் வேறு விதமாக இருப்பேன். அதனால்தான் அந்தப் பெயரை நான் தேர்வு செய்தேன்" எனக் கூறினார். மேலும், சாய் பல்லவியின் பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 'அவர் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுகிறார்' என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.