அரசியல்

பீகார் பயணம் முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்- அன்புமணி ராமதாஸ்

“பீகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பீகார் பயணம் முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்- அன்புமணி ராமதாஸ்
CM Stalin and Anbumani Ramadoss
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் வாக்காளர் அதிகார யாத்திரையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்ற நிலையில், “பீகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் யாத்திரை

பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ மேற்கொண்டுள்ளார். கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெற்று பாட்னாவில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த யாத்திரை பேரணியை 1,300 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

இந்த நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த பேரணியில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேரணியாக சென்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்திய உரையாற்றினார்.

‘சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்’

முதலமைச்சர் ஸ்டாலினின் பீகார் பயணம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது பக்கத்தில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பீகாருக்கு சென்றுள்ளார். புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பீகாரின் புத்த கயாவில் தான் இருந்தது.

அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங், சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பீகார் தான். இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீகார் தான்.

அத்தகைய சிறப்பு மிக்க பீகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.