அரசியல்

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!
விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!
மதுரை யானைக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள், தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மமக பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜூலை 6 ஆம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது. இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெறுகிறது.

இந்தியாவில் 15 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆனால், சதவீதத்துக்கு ஏற்ற வரையில் அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுவதில்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை என்றார். இஸ்லாமிய மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என ஜவஹர்லால் நேரு கூறினார்.

ஆனால், நேரு காலத்தில் இருந்து இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை. பாசித்தை எதிர்க்க கூடிய திமுக கூட்டணியில் எந்தவொரு சலனமும் இன்றி பயணித்து வருகிறோம் என கூறினார்.

விஜயின் கூட்டணி சொல்வீர்களா.? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். காலப்போக்கில் தான் அவருடைய நிலைப்பாடு தெரியும். என்று கூறினார். மேலும், விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியவரே அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்துள்ளார். என்று விமர்சித்தார். விஜய் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார். விஜய் எடுப்பார் கைப்பிள்ளை போல செயல்பட்டு வருகிறார் என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால், பாரதிய ஜனதா கட்சி விஜயை இயக்கி வருவது என தெள்ளத் தெளிவாகிறது என்று பேசிய அவர், திமுக ஆட்சி குறித்து பேச பாஜக, அமித்ஷாவுக்கு தகுதியில்லை, மத்திய அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.