தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!

அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!
அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் அனு பொருச் (65). இவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனுவின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து அனுவை அழைத்துக் கொண்டு மகளும், மருமகனும், அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வந்தனர். சென்னையில் இருந்து டிரன்சிட் பயணிகளாக ஐதராபாத் செல்லும் மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்படுவதற்கு தயாரானார்கள்.

அப்போது அனு திடீரென நெஞ்சு வலியால் துடித்தபடி மயங்கி விழுந்தார். இதை கண்டு பதறிய மகள், மருத்துவ உதவியை கேட்டார். உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அனு உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக, சென்னை விமான நிலைய மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, அனு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். உடலை சொந்த ஊரான அசாம் மாநிலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.