தமிழ்நாடு

அட்ராசிட்டி செய்யும் நடிகர் சூரியின் தம்பி.. ஆட்சியரிடம் புகாரளித்த நபரால் பரபரப்பு

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்ராசிட்டி செய்யும் நடிகர் சூரியின் தம்பி.. ஆட்சியரிடம் புகாரளித்த நபரால் பரபரப்பு
death threats from actor soori brother
மதுரை நரிமேடு பகுதி சோனையார் கோவில் மெயின்ரோடு பகுதியில் அலைகள் அச்சகம் என்ற கடையை நடத்தி வருபவர் முத்துச்சாமி (55). இவர் கடந்த ஏழு வருடமாக அந்த பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாராந்திர குறைதீர்ப்பு மனு நாள் கூட்டம் நடைப்பெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் முத்துச்சாமி புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

அந்த மனுவில் நடிகர் சூரியின் சகோதரர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபடுவதோடு, கொலைமிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். புகார் மனுவின் விவரங்கள் பின்வருமாறு-

”தான் நடத்தி வரும் அலைகள் அச்சகம் கடைக்கு கீழே நடிகர் சூரி-யின் சகோதரர் லட்சுமணன் என்பவர் நடத்தி வரும் அம்மன் உணவகம் தற்போது செயல்பட்டு வருகிறது. எங்கள் இருவருக்குமான பொது பாதையை லட்சுமணன் ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் உணவக வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்கிறார்.

இப்பகுதியில் 10-க்கு மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பினால், பள்ளி வாகனம் செல்ல முடியாமலும், அதோடு அவசர உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமலும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்”.

கடைக்குள் புகுந்து ஆவணங்கள் திருட்டு:

”இதனால் தங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது கடைக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி உள்ளே நுழைந்து பூட்டை உடைத்து, சேமிப்பு பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். மாடிக்கு செல்லும் பாதைக்கு பூட்டு போட்டு விட்டனர், வீட்டு உரிமையாளரிடம் கூடுதல் பணம் தருகிறேன் மாடியில் இருப்பவரை காலி செய்து தன்னிடம் கொடுங்கள் என வீட்டு ஓனருக்கும் தனக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி அராஜக செயலில் ஈடுபடுகிறார்” என முத்துச்சாமி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “நடிகர் சூரிக்கு தெரிந்து தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா? அல்லது அவரது பெயரை கெடுப்பதற்காக அவரது தம்பிகள் இது போன்ற தவறுகள் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. அவர்கள் தொழில் நடத்துவது குறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனால், இது போன்ற அராஜக செயலில் ஈடுபட்டும் அவரது சகோதரர் லக்ஷ்மணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கொலை மிரட்டல் விடுப்பதாலும் உயிருக்கு பயந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். நடிகர் சூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது வேதனை அளிக்கிறது” எனவும் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.