தமிழ்நாடு

நடுவானில் ஏற்பட்ட திடீர் 'எஞ்சின் கோளாறு'.. சென்னையில் அவரசமாகத் தரையிறங்கிய Air Asia விமானம்!

கோலாலம்பூரிலிருந்து கோழிக்கோடு சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா (Air Asia) விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் சென்னை அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் ஏற்பட்ட திடீர் 'எஞ்சின் கோளாறு'.. சென்னையில் அவரசமாகத் தரையிறங்கிய Air Asia விமானம்!
நடுவானில் ஏற்பட்ட திடீர் 'எஞ்சின் கோளாறு'.. சென்னையில் அவரசமாகத் தரையிறங்கிய Air Asia விமானம்!
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி 166 பேருடன் சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா (Air Asia) விமானம், நடுவானில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் 166 பயணிகளும் ஊழியர்களும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

கோலாலம்பூரிலிருந்து 158 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர் ஏசியா (Air Asia) விமானம், நள்ளிரவு 11:50 மணிக்குச் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் ஒரு இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி உடனடியாகக் கண்டுபிடித்தார். விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது என உணர்ந்த அவர், விமானத்தை உடனடியாக அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்தார்.

உடனடியாகச் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி கேட்டார். இதற்கு 'க்ளியரன்ஸ்' அளிக்கப்பட, நள்ளிரவு 12:10 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த 'த்ரில்லர்' சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானம் தரையிறங்கியதும், விமான நிலையப் பொறியாளர்கள் 'டீம்' விரைந்து சென்று பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், கோளாறை உடனடியாகச் சரிசெய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, சொகுசுப் பேருந்துகள்மூலம் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் பழுதுபார்க்கப்பட்டு, இன்று மாலை மீண்டும் கோழிக்கோடு புறப்பட்டுச் செல்லும் என ஏர் ஏசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.