தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசு நாடகமாடுகிறது – ஆனந்தன் குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் வழக்கை வைத்து தமிழக அரசு நாடகமாடுவது நம்பகத்தன்மை அற்ற செயலாக இருக்கிறது என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் கருத்து

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசு நாடகமாடுகிறது – ஆனந்தன் குற்றச்சாட்டு
பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆனந்தன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றால், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நாடகமாடுகிறது

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்போட்டியில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றால், அந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் வழக்கை வைத்து தமிழக அரசு நாடகமாடுவது நம்பகத்தன்மை அற்ற செயலாக இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி பயன்படுத்தக்கூடிய யானை சின்னத்தை பயன்படுத்தி வருகிறது. அந்த சின்னத்தை தவெக பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்

வருகிற 10 ஆண்டுக்குள் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி யானை சின்னத்தில் நின்று போட்டியிடப்போவதாகவும் கூறினார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஓரிரு நபர்களால் குழப்பம் ஏற்படுகிறது. திமுகவின் தூண்டுதலின் பெயரிலேயே இது போன்ற செயல்கள் நடந்து வருவதாக ஆனந்தன் குற்றம்சாட்டினார்.