தமிழ்நாடு

பெட்ரோல் தீரும் வரை ஜாலி 'ரவுண்ட்ஸ்'.. சென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறார்கள்!

சென்னையில் பெட்ரோல் தீரும் வரை ஜாலியாகச் சுற்றிவிட்டு, வாகனங்களைக் கைவிடும் நூதனத் திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர்.

பெட்ரோல் தீரும் வரை ஜாலி 'ரவுண்ட்ஸ்'.. சென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறார்கள்!
Bike Theft
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்த நிலையில், அந்தத் திருட்டில் ஈடுபட்டது பள்ளி மாணவர்கள் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சூளைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த மூன்று சிறுவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியபோது இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

பிடிபட்டது எப்படி?

கடந்த 26-ஆம் தேதி சூளைமேடு கஸ்தூரிபாய் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை மூன்று சிறுவர்கள் திருட முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீஸார், அந்தச் சிறுவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவர்களைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும், அவர்கள் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

பெட்ரோல் தீரும் வரை 'ரவுண்ட்ஸ்'

விசாரணையில் பிடிபட்ட மூன்று சிறுவர்களும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் அரசுப் பள்ளியில் 7 மற்றும் 8-ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் அண்ணாநகர், சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்களைத் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். திருடிய வாகனத்தில் பெட்ரோல் இருக்கும் வரை ஊர் சுற்றிவிட்டு, பெட்ரோல் தீர்ந்தவுடன் அந்த வாகனத்தை ஏதேனும் ஒரு மறைவிடத்தில் விட்டுவிடுவார்கள். பின்னர் அங்கிருந்து அடுத்த வாகனத்தைத் திருடிச் செல்வதை அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

காவல்துறை நடவடிக்கை

சிறுவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு இருசக்கர வாகனங்களைச் சூளைமேடு போலீஸார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட சிறுவர்கள் 12 முதல் 14 வயதுடையவர்கள் என்பதால், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.