தமிழ்நாடு

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு – அப்பேட் கொடுத்த அமைச்சர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு – அப்பேட் கொடுத்த அமைச்சர்
அமைச்சர் சேகர்பாபு
திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.414 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் விதமாக குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்துக்கான பணிகள் முடிவடைந்து விட்டன. இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருப்பதால் இந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் பயணிகள் நிறுத்தும் இடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வறைகள், உணவகங்கள், மருத்துவ வசதிக்கான கட்டமைப்பு, பாதுகாப்புக்கான காவல் அமைப்பு என அனைத்தும் இன்றே நேரில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்படும். பருவமழையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய பிரச்னைகளுக்கு தீர்வு

பருவமழை பெரியளவில் இல்லையெனில் 2025 நவம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும் என்றும் வாரத்திற்கு ஒருமுறையாவது, நானோ அல்லது துறையின் செயலாளரோ அல்லது உறுப்பினர் செயலாளரோ, இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு முன்னேற்றத்தை கண்காணிக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டபோது சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் முறையாக தீர்க்கப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில் எந்தக் கட்டுமானத்திலும் சிறிய சிக்கல்கள் இருக்கும். ஆனால் திட்டமிடல் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் ஆரம்பித்த பேருந்து நிலையம் இப்போது திட்டமிட்டு பயணிகள் வசதிக்கேற்ப மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இரவு 11, 12 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதாக புகார்களுடன் 50-100 பேர் வந்தால் கூட, அதற்கேற்ப உடனடி ஏற்பாடுகள் செய்து பேருந்துகளை இயக்கி வருகின்றோம்.

பகலில் எந்தவித சிக்கலும் இல்லாது இயங்கி வருகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். புதிதாக எழும் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். உதாரணமாக, திருச்சி விமான நிலையம் தொடங்கி பல வருடங்கள் ஆகியும் விமான சேவை முறையாக இல்லை. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த 2023 டிசம்பர் 31 அன்று திறக்கப்பட்ட நாளிலிருந்தே மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. அந்த பேருந்து நிலையத்தில் கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா, நீரூற்றுப் பூங்கா, மருத்துவமனை, சிறு மழையிலும் தண்ணீர் தேங்காமல் வடிகால்கள் என அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசல் குறையும்

2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் ரயில் நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் இல்லாத காரணமாக தற்போது அதற்கும் கட்டமைப்புப் பணிகள் முடிவடைவதில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். மாதவரம் பேருந்து நிலையம் இன்னும் முழுமை அடையவில்லை. அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்த பிறகு தென் மாவட்டங்களுக்கு பெரிதும் பயணிகள் சேவையை வழங்கும் வகையில் அதிக பேருந்துகள் இயக்கப்படும்.

கடந்த 45 நாட்களாக சில பேருந்துகள் இயக்கப்படத் தொடங்கியுள்ளன. மெட்ரோ பணியும் விரைவில் முடிவடையும். கிளாம்பாக்கம், மாதவரம், குத்தம்பாக்கம், செங்கல்பட்டு, மகாபலிபுரம் ஆகிய பேருந்து நிலையங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, சென்னை மாநகரப்பகுதி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஒரு தீர்வாக அமையும் என தெரிவித்தார்.