தமிழ்நாடு

“கண்ணீர் வேண்டாம் தம்பி”- மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய முதல்வர்

இரண்டு கைகளை இழந்த தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளி மாணவன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

 “கண்ணீர் வேண்டாம் தம்பி”- மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய முதல்வர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் கீர்த்து வர்மா

12ம் வகுப்பு தேர்வில் அசத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுவயதிலேயே மின்சாரம் தாக்கி இரண்டு கைகளையும் இழந்த மாணவன் கீர்த்தி வர்மா படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் படங்கள் வரைவதிலும் இவர் கைதேர்ந்தவராக இருந்தார்.இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவன் கீர்த்தி வர்மா 437 மதிப்பெண் பெற்று தான் படித்த பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தார்.

இவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டினர். இந்நிலையில் இந்த வருடம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கீர்த்தி வர்மா 471 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆசிரியர்களின் துணையோடு தேர்வு எழுதிய மாணவன் 471 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

உதவிக்கரம் நீட்டிய முதல்வர்

இதுகுறித்து பேசிய மாணவன் கீர்த்தி வர்மா, அடுத்ததாக பி.இ படிக்க ஆசைப்படுகிறேன்.அதற்கு அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும். மேலும் இரண்டு கைகளை இழந்த தனக்கு, கைகளை பொருத்த தமிழக முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும். தாயின் அரவணைப்பில் வாழும் தனக்கு அரசு முன்வந்து உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில், கண்ணீர் வேண்டாம் தம்பி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் மாணவனின் வீடியோவை பகிர்ந்து, “கண்ணீர் வேண்டாம் தம்பி! அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.