தமிழ்நாடு

மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீதான போக்சோ வழக்கில் சந்தேகம்...ஆட்சியரிடம் மனு

ஜான் ஜெபராஜ் மீது போடப்பட்டுள்ள போக்சோ வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும், அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீதான போக்சோ வழக்கில் சந்தேகம்...ஆட்சியரிடம் மனு
மதபோதகர் ஜான் ஜெபராஜ் மற்றும் அவருக்கு ஆதரவாக மனு அளித்தவர்கள்
ஜான் ஜெபராஜ் கைது

மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது இரண்டு சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்றைய தினம் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தினர், ஜான் ஜெபராஜ் மீது போடப்பட்டு உள்ள வழக்கு காழ்புணர்ச்சி காரணமாக பொய் வழக்காக புனைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கை அரசு பரிசீலனை செய்து வழக்கின் உண்மை போக்கு என்ன என்பதை காவல் துறை வெளிப்படையாக கூற வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் சொந்த இடம் மற்றும் வாடகை இடத்தில் ஜெபக் கூட்டம் தடையின்றி நடத்தப்பட வேண்டும், ஜெபக் கூட்டம் நடத்தும் பொழுது இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், ரோமன் கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ சபை போல் பெந்தகோஸ்தே குழுவினரையும் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும், ஜான் ஜெபராஜ் குறித்து சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த இயக்கத்தின் நிறுவனர் ஜோஸ்வா ஸ்டீபன், “தற்பொழுது ஜான் ஜெபராஜ் மீது புகார் அளித்தவர்கள். கடந்த 11 மாதங்களுக்கு முன்பே இதே போன்ற ஒரு புகாரை அளித்து இருந்ததாகவும். அதில் காவல் துறையினர் விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத பட்சத்தில் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும். எனவே இதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். ஜான் ஜெபராஜ்-க்கும் அவரது மனைவிக்கும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கருத்து வேறுபாடு பிரச்சனை இருந்து வரும் சூழலில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பிட்டார்.

போராட்டம் நடத்த திட்டம்

இது சம்பந்தமாக ஆர்ப்பாட்டத்தை நாங்கள் அறிவிக்கும் பொழுது பல்வேறு தரப்பிலிருந்து தங்களை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்த அவர், ஜான் ஜெபராஜ் பங்கேற்ற சபையின் உதவியாளர் எட்வின் ரோஸ் என்பவர்கள் மீது தான் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமேயானால் அடுத்த கட்டமாக போராட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.