தமிழ்நாடு

வடிவேலு பட பாணியில் தப்பிக்க முயற்சி-படகில் சென்று கைது செய்த போலீஸ்

நாகர்கோவில் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய இளைஞரை பிடிக்க சென்ற போலீசார் தப்பிக்க ஓடி குளத்தில் குதித்து தப்ப முயன்ற இளைஞர் வடிவேல் பட பாணியில் வருவது போல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 வடிவேலு பட பாணியில் தப்பிக்க முயற்சி-படகில் சென்று கைது செய்த போலீஸ்
குளத்தில் விழுந்து தப்பியவரை படகில் சென்று பிடித்தனர்
குமரி மாவட்டம், தக்கலை அடுத்த காட்டாத்துறை அருகே உள்ள குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் காட்டாத்துறையில் விஜி என்பவர் நடத்தி வரும் இறைச்சி கடைக்கு செல்வது வழக்கம். அங்கு வரும் விஜியின் நண்பர்கள் விஜின்குமார் , ஸ்டாலின் ஆகியோரும் ஸ்டீபனுக்கு அறிமுகம் ஆனவர்கள்.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் சம்பவத்தன்று இறைச்சி கடைக்கு இறைச்சி வாங்க சென்றபோது, விஜி மற்றும் அவரது நண்பர்கள் விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் ஸ்டீபனை கேலியாக பேசினர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு காரணமாக நேற்றுமுன்தினம் இரவு குருவிளைகாடு சந்திப்பு பகுதியில் நின்ற ஸ்டீபனை, விஜி மற்றும் அவரது நண்பர்கள் விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் வழிமறித்து தகராறு செய்து, அரிவாளாலும் வெட்டினர். இதில் ஸ்டீபன் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்டீபன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனிப்படை போலீஸ் தீவிரம்

புகாரின்பேரில் விசாரணை நடத்தி விஜி, விஜின்குமார், ஸ்டாலின் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் விஜி, விஜின்குமார் போலீசாரிடம் சிக்கினர். ஸ்டாலினை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் பறக்கை பகுதியில் இருக்கும் தகவல் அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று குளத்தின் கரையில் அமர்ந்திருந்த ஸ்டாலினை பிடிக்க முயன்றனர். தனிப்படை போலீசாரை பார்த்ததும் குளத்துக்குள் பாய்ந்தார். அந்த குளம் தாமரையால் நிரம்பி உள்ளது. அதற்குள் புகுந்து நீரில் மூழ்கி பதுங்கினார். அவர் வெளியே வருவார் என தனிப்படை போலீசார் காத்திருந்தனர். ஆனால் தண்ணீருக்குள் மூழ்கியவாறே, ஸ்டாலின் தனிப்படை போலீசாருக்கு போக்கு காட்டினார்.

படகில் சென்று பிடிப்பு

இதையடுத்து தீயணைப்பு துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சென்று, குளத்துக்குள் இறங்கி, படகில் ஸ்டாலினை பிடித்து மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் அவர் தக்கலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பறக்கை குளத்தை சுற்றி பொதுமக்களும் திரண்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.