உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 900-ஐ தாண்டியது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 900-ஐ தாண்டியது!
Earthquake in Afghanistan.. Death toll exceeds 900
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் எனுமிடத்தை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வீடுகள், கட்டிடங்கள் இடிந்து சேதம்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து, அதே மாகாணத்தில் ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

மீட்புப் பணிகள் தீவிரம்

இந்தச் சம்பவத்தில் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபதரே ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மீட்புக் குழுவினர் சில பகுதிகளுக்குச் செல்வதில் சிக்கல் நிலவுவதாக தலிபான் அரசின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஷராஃபத் ஜமான் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்க மண்டலத்தில் அமைந்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாடு புவியியல் ரீதியாக நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாக அங்குள்ள இந்து குஷ் மலைகள், இந்திய மற்றும் யூரேசிய டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது. இதனால், அங்கு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.