இந்தியா

மின்வெட்டால் தூக்கம் போச்சு: கையில் தலையணையுடன் EB ஆபிசுக்கு சென்ற பெண்!

நவி மும்பையின் உல்வே பகுதியில், தொடர் மின்வெட்டைக் கண்டித்து பெண் ஒருவர் கையில் தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மின்வெட்டால் தூக்கம் போச்சு: கையில் தலையணையுடன் EB ஆபிசுக்கு சென்ற பெண்!
Mumbai Power cut
நவி மும்பையின் உல்வே பகுதியில், தொடர் நள்ளிரவு மின்வெட்டைக் கண்டித்து வேலைக்குச் செல்லும் பெண் ஒருவர் கையில் தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று வினோதப் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உல்வே பகுதியைச் சேர்ந்த இப்பெண், இரவு 11 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டு, மீண்டும் காலை 6 மணிக்கே வேலைக்குக் கிளம்பக்கூடியவர். இதனால் இரவில் சில மணி நேரங்கள் மட்டுமே அவருக்குத் தூங்கக் கிடைக்கும். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக அப்பகுதியில் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 4 அல்லது 5 மணி வரை தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. கோடைக் காலத்து புழுக்கத்தில் மின்விசிறி மற்றும் ஏசி இல்லாமல் தவித்ததால், அவதிக்குள்ளான அவர் கடந்த சில நாட்களாகச் சரியாகத் தூங்க முடியாமல் உடல் மற்றும் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாரிகளிடம் குமுறல்

அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தப் பலனும் இல்லாததால், விரக்தியடைந்த அந்தப் பெண் நள்ளிரவில் கையில் தலையணையுடன் உள்ளூர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றார். அங்கிருந்த அதிகாரிகளிடம், "சுற்றுவட்டாரப் பகுதிகளில் இங்கு மட்டும்தான் மின்சாரம் இருக்கிறது, அதனால் நான் இங்கேயே தூங்க வந்துவிட்டேன்" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இணையத்தில் வைரல்

மின்வெட்டால் தனது அன்றாட வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அழுதுகொண்டே அவர் விவரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததால் நகர்ப்புறங்களில் சாமானிய மக்கள் சந்திக்கும் அன்றாடத் துயரங்களையும், சோர்வையும் இந்தப் போராட்டம் பிரதிபலிப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.