அரசியல்

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், 8 முழ வேஷ்டிக்கு பதிலாக தரமான 4 முழ வேஷ்டி மற்றும் ஜரிகை சேலை வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என ஆஸ்டின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்றார். தற்போது 4 முழ வேஷ்டியை உற்பத்தி செய்ய ஏற்கனவே உள்ள தறிகளில் மாற்றம் செய்ய வேண்டியிருப்பதாகவும், குறுகிய காலத்தில் உற்பத்தியை முடிப்பது சிரமம் என்றும் தெரிவித்தார்.

மேலும், “8 முழ வேஷ்டிக்கு பதிலாக 4 முழ வேஷ்டிதான் வேண்டும் என மக்கள் கேட்டார்களா? இதுகுறித்து கருத்துக் கேட்பு நடத்தப்பட்டதா? தரம் குறைந்த வேஷ்டிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்தத் திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து பேசிய அதிமுக உறுப்பினர், அரசின் கொள்முதல் ஆணையை எதிர்பார்த்து ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஏராளமான வேஷ்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவற்றையும் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி, தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நீண்ட காலமாக ஒரே மாதிரியான வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், பெரும்பாலான மக்கள் 4 முழ வேஷ்டியை விரும்பியதாகவும் அவர் கூறினார். மேலும், நெசவாளர்களும் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ள அனைத்து வேஷ்டி, சேலைகளையும் அரசு கொள்முதல் செய்யும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, “அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு எங்கள் கட்சி உறுப்பினர்கள் புதிய 4 முழ வேஷ்டியை அணிந்து வருகிறோம். நீங்கள் கடந்த ஆட்சியில் வழங்கிய 8 முழ வேஷ்டியை அணிந்து வாருங்கள். எந்த வேஷ்டி தரமானது என்பதை மக்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்” என்று பதிலடி கொடுத்தார்.