அரசியல்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்? துரை வைகோ பதில்!

"துரதிஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம், அதனால் தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்க முடியவில்லை" என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்? துரை வைகோ பதில்!
Durai Vaiko
சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ள சூழலில், புதிய அரசுக்கான கால அவகாசம் மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து மதிமுக எம்பி துரை வைகோ முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்திற்கு வருகை தந்த அவரை மதிமுக மக்களவை உறுப்பினர் துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நேரில் வரவேற்றனர்.

மாற்றங்களை உருவாக்கக் கால அவகாசம் தேவை

வரவேற்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக எம்பி துரை வைகோ பேசுகையில், "புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அனைத்து மாற்றங்களையும் உருவாக்கிவிட முடியாது. புதிய அரசாங்கம் தங்களது திட்டங்களைச் செயல்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தக் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலாவது கால அவகாசம் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து" என்று தெரிவித்தார்.

கூட்டணி மற்றும் ஆதரவு நிலைப்பாடு

மேலும் பேசிய அவர், "எங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிர்ஷ்டவசமாகத் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், எங்களால் தற்போதைய அரசுக்கு நேரடியாக ஆதரவு கொடுக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. எனினும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ஐ.யு.எம்.எல் உள்ளிட்ட இயக்கங்கள் புதிய அரசுக்குத் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "வருகிற 27-ஆம் தேதி மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. அந்தப் பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகளின் மனநிலைக்கு ஏற்பவே இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று விளக்கமளித்தார்.