தமிழ்நாடு

மதியம் 3 மணி நிலவரம்: தமிழகத்தில் 70% வாக்குகள் பதிவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

மதியம் 3 மணி நிலவரம்: தமிழகத்தில் 70% வாக்குகள் பதிவு!
70% voting registered in Tamil Nadu
தமிழகத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர்கள் வரலாறு காணாத ஆர்வத்தைச் செலுத்தி வருகின்றனர். மதியம் 1 மணி வரை 56.81 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மளமளவென உயர்ந்து, 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 70 சதவீதத்தை எட்டியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் முதலிடம்; கன்னியாகுமரி பின்தங்கியுள்ளது

மாவட்ட வாரியான நிலவரப்படி, மதியம் 3 மணி வரை அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. குறைந்தபட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 61.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியாகப் பார்த்தால், குமாரபாளையம் தொகுதியில் 80.67 சதவீதத்துடன் வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது; பாளையங்கோட்டை தொகுதியில் குறைந்தபட்சமாக 56.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

2021 தேர்தலை முறியடித்த சாதனை

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது மதியம் 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஆனால், இந்த முறை அதே நேரத்தில் சுமார் 16.65 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியிருப்பது அரசியல் நோக்கர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு முனைப் போட்டி மற்றும் புதிய வாக்காளர்களின் வருகை இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீடிக்கும் என்பதால், ஒட்டுமொத்த சதவீதம் 80-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.