தமிழ்நாடு

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. மாநகராட்சி நடவடிக்கை!
Chennai Corporation
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சொத்து வரி திடீரென உயர்த்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஷெனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகம் உட்படப் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் திரண்டு முறையிட்டதால் இவ்விவகாரம் பரபரப்பானது.

இதுகுறித்து விளக்கமளித்த மாநகராட்சி ஆணையர் சமீரன், சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்த இடங்களுக்கு மட்டுமே வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

அதேவேளையில், சொத்து வரி மாற்றம் குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் கலந்தாலோசிக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிருப்தி தெரிவித்தார். மேலும், இந்த மறுமதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து, இந்தச் சொத்து வரி மாற்றியமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட சொத்துகளுக்கான வரித் திருத்தம் குறித்துப் பொதுமக்கள் அளித்த மனுக்கள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் இந்த வரி மாற்றியமைப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரிகளானது இதற்கு முன் நடைமுறையில் இருந்த பழைய அளவிற்கே மீண்டும் கொண்டு வரப்படும். மாற்றியமைக்கப்பட்ட புதிய வரித்தொகையை ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத் தொகை அவர்களின் அடுத்தடுத்த அரையாண்டு வரிக்கான முன்பணமாக ஈடு செய்யப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் சமீரன் தெளிவுபடுத்தியுள்ளார்.