சினிமா

நா.முத்துக்குமாருக்காக ஒரே மேடையில் 8 இசையமைப்பாளர்கள் – சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

நா.முத்துக்குமாருக்காக ஒரே மேடையில் 8 இசையமைப்பாளர்கள் – சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
நா.முத்துக்குமாருக்காக நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி அறிமுக போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள்
தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர்.

'ஆனந்த யாழை' விழா

இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர், இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர், இயக்குநர் ஆர் வி உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் விஜய் , எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா ஆகியோர் கலந்துகொண்ட 'ஆனந்த யாழை' விழா சென்னையில் நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தி வரும் ஏசிடிசி நிறுவனத்துடன் கைகோர்த்து ஆனந்த யாழை விழாவை நடத்த இருக்கின்றனர்.

வரும் ஜூலை 19 ஆம் தேதி இந்த விழா நேரு உள்ளரங்கம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஒரு சேர ஒரு நிகழ்வில் இசைப் பந்தி வைப்பது இதுவே முதல் முறை.

பிரபலங்கள் பங்கேற்பு

குரல் வளம் மிக்க கலைஞர்களான சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு உத்தரா உன்னிகிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் தங்களது பங்களிப்பைத் தர இருக்கிறார்கள். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு விழாவில் கலந்துகொண்ட, நா முத்துக்குமாருடன் இணைந்து பயணித்த பிரபல திரைக்கலைஞர்கள் ஆனந்த யாழை நிகழ்ச்சி நிகழ்ச்சிக்கான போஸ்டரை (லோகோவை) வெளியிட்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் ராம், எழுத்தாளர் பவா செல்லத்துரை, எழுத்தாளர் அஜயன் பாலா, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் விஜய், பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

யார் சுதந்திரத்திலும் தலையிடவில்லை

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம், “நா.முத்துக்குமார் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்த்திரை இசைப் பாடல்களைக் கேட்கக்கூடிய எல்லோருடைய வீடுகளிலும் ஆனந்த யாழை மீட்டிக் கொண்டிருக்கிறார். மீட்டப்போகிறார். நா.முத்துக்குமார் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் இல்லை. முத்துக்குமார் எப்போதும் இமயமலை என்றாலும் தன்னை பனித்துளி அளவே காட்டிக் கொள்வார். நான் முதல் படம் எடுக்கக் காரணமாக இருந்தவரே முத்துக்குமார் தான். திரையுலகில் உள்ள நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் முதலில் பேசுவது முத்துக்குமாரைப் பற்றித் தான் இருக்கும்.

இது நா.முத்துக்குமாரை தமிழகம் முழுக்க கொண்டாடப் போகிற ஒரு விழா. முத்துக்குமாரின் சாதனைகளை, முத்துக்குமாரின் வரிகளை என்றென்றும் தமிழகத்தில் நிலைத்திருக்குமாறு செய்யக்கூடிய விழா. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு நடந்திராத ஒரு விழா என்று கூட சொல்லலாம்” என்று கூறினார். இதேபோல் பல்வேறு இயக்குநர்களும் நா.முத்துகுமார் குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.