சினிமா

இன்ஸ்டாவில் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை.. நடிகை ரவீனா ரவி பரபரப்பு புகார்!

ஆபாசமாக அவதூறாக மெசெஜ் அனுப்பி இரட்டை சகோதரர்கள் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இன்ஸ்டாவில் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை.. நடிகை ரவீனா ரவி பரபரப்பு புகார்!
Actress Raveena Ravi
'லவ் டுடே', 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரவீனா ரவி, கடந்த நான்கு ஆண்டுகளாகத் தான் அனுபவித்து வரும் மன உளைச்சல் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி குரல் கலைஞர் ஸ்ரீஜா ரவியின் மகளான இவர், திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள சூழலில், தனக்கு நேர்ந்து வரும் தொடர் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபாசமாக மெசேஜ் அனுப்பும் இரட்டையர்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சபரீஷ் மற்றும் அவரது இரட்டைச் சகோதரர் ஆகிய இருவர் மீது ரவீனா மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் தன்னை மட்டுமின்றி, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் ஆன்லைனில் பின்தொடர்ந்து, மிகவும் அருவருப்பான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் துன்புறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட நபர்களை எச்சரித்தும் இந்த அத்துமீறல்கள் நின்றபாடில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்

அந்த நபர்களின் தொல்லைகள் எல்லை மீறிச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ள ரவீனா, தங்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகப் பொய்யான தகவல்களை அந்த நபர்கள் பரப்பி வருவதாகவும், தன்னை மட்டுமின்றி இன்னும் சில பெண் நடிகைகள் மற்றும் தொழில்முறை கலைஞர்களையும் இவர்கள் இதேபோன்று அச்சுறுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தொடர் தொந்தரவுகளால் தனது சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படுவதாக ரவீனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

"சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிட்டுள்ள ரவீனா, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர், சென்னை காவல்துறை மற்றும் சைபர் கிரைம் துறையினர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது பதிவில் டேக் செய்துள்ளார். இனி மௌனம் காக்க முடியாது என்பதால், பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் இருந்து வரும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை ரவீனா ரவியின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.