சினிமா

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் - கர்நாடக உயர்நீதிமன்றம்

தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் - கர்நாடக உயர்நீதிமன்றம்
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் - கர்நாடக உயர்நீதிமன்றம்
கன்னட மொழிக்குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தக் லைஃப் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், கமல்ஹாசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், "நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா? என்று கடுமையான கேள்விகளை முன்வைத்தது மட்டுமில்லாமல், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கன்னடமொழி குறித்து, தக் லைஃப்' இசை வெளி​யீட்டு விழா​வில் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதையும், திரையிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கமல் ஹாசன் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின் போது உயர் நீதிமன்றம் கமல்ஹாசனை இவ்வாறு சாடியுள்ளது.

.உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், "இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக்கூடாது. கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள் நீங்கள் வரலாற்றாய்வாளரா? அல்லது மொழியியல் அறிஞரா?

கர்நாடகாவில் உங்கள் படம் ஓட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள். கருத்துச் சுதந்திரம் மக்களின் மனதினைப் புண்படுத்துவதற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மன்னிப்புக்கேளுங்கள் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்." என்று தெரிவித்தார். 2.30 மணிக்குள் ஒரு முடிவை கமல் தரப்பு கூற வேண்டும். பிறகு என்னுடைய தீர்ப்பை அறிவிக்கிறேன் என்று நீதிமன்றாம் தெரிவித்துள்ளது.