சினிமா

மன்னிப்பு கேட்க மறுப்பு..! Thug Life காட்டும் கமல்..! Tough Life-ல் மணிரத்னம்?

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ் கமல் ஃபிலிம்ஸ் கோரிக்கை வைத்துள்ளது. கமலின் பேச்சால் ஏற்பட்ட மொழி சர்ச்சையால் மணிரத்னம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

மன்னிப்பு கேட்க மறுப்பு..! Thug Life காட்டும் கமல்..! Tough Life-ல் மணிரத்னம்?
மணிரத்னம் - கமலஹாசன்
தமிழ் மற்றும் கன்னட மொழிகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மீதான விவாதம், நடிகர் கமல்ஹாசன் கூறிய "கன்னடம் தமிழ் மொழியிலிருந்து உருவானது" என்ற கருத்தால் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பேச்சு, கர்நாடகாவில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ”LOVE DOESN'T APOLOGIZE” என்று மன்னிப்பு கோர முடியாது என்பதை சொல்லாமல் சொல்லினார் ஆண்டவர். இதனால் கர்நாடக மக்கள் மத்தியில் மேலும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்தொடர்ச்சியாக, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்காதபட்சத்தில், அவரது புதிய திரைப்படமான 'தக் லைஃப்' படத்தை மாநிலத்தில் வெளியிட அனுமதி வழங்க மாட்டோம் என்று அறிவித்தது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சட்ட ரீதியான நடவடிக்கையை முன்னெடுத்தார். ஜூன் 3ம் தேதி நடைபெற்ற வழக்கின் விசாரணையில், நீதிபதிகள், "நீங்கள் ஒரு வரலாற்று நிபுணரா?" என்று கேட்டு, அவரது கருத்து கர்நாடக மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளதாகக் கூறினர். மேலும், "மன்னிப்பு சொல்ல முடியாதா?" என்றும் கேட்டனர்.

இதனிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதமும் எழுதினார். அந்த கடித்ததில் ”கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. நாம் அனைவரும் ஒன்று. ஒரே குடும்பம் என்பதைதான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேனே தவிர, கன்னட மொழியையோ, மக்களையோ இழிவு படுத்தும் நோக்கத்தில் அல்ல” என எழுந்தியிருந்தார்.

கர்நாடகா ஃபிலிம் சேம்பருக்கு கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என கமல் எழுதிய கடிதம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால், தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பு கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த அறிக்கையில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை என்பதால் அதனை ஏற்க மறுத்தது கர்நாடக நீதிமன்றம். மேலும், “கமல்லா இருங்க..யாரா வேணா இருங்க.. மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்றும் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஈகோ? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு இது ஈகோ இல்லை எனக் கூறி கமல் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாதம் செய்தது. ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கையும் வைத்திருக்கிறது.

இதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், “கமல்ஹாசன் தனிப்பட்ட முறையில் பிடிவாதமாக உள்ளார்; சின்ன சின்ன விஷயத்திற்கு கமல் தவறு செய்துள்ளார்; அவர் மன்னிப்பு கேட்பார். போராட்டம் கலவரமாக மாறக்கூடாது என கன்னட அமைப்புகளை கேட்டுக் கொள்கிறேன்; அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு; தினம் ஓசூருக்கு 50 ஆயிரம் பேர் செல்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கமலால் வந்த இந்த மொழி சர்ச்சையால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டால், 10 கோடி முதல் 20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்ற அப்செட்டில் மணிரத்னம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமல் மன்னிப்பு கேட்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..