அரசியல்

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!
தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!
சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் அணல் பறக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார் தவெக தலைவர் விஜய்.

ஆக்சுவலாக விஜய்யை பொருட்படுத்தாமல் அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டுமென்பதுதான் தி.மு.க.வின் விருப்பம். ஆனால் சமீப தினங்களில் தி.மு.க.வை ஓவராகத் தாக்கும் விஜய், அ.தி.மு.கவை கொஞ்சமும் கண்டுகொள்ளாதது அறிவாலயத்தை சூடாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதை மனதில் கொண்டுதான் த.வெ.க.வுக்கு எதிராக சில ஜித்து வேலைகளை தொடங்கியிருக்கிறது தலைமை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

இந்த நிலையில், த.வெ.கவில் மாவட்ட பொறுப்புகளுக்கு மா.செக்கள் 'லட்டு' கேட்கிறார்கள் என பல்வேறு மாவட்டங்களில் பூசல் வெளிப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், நிர்வாகிகள் சிலர் தனி கோஷ்டியாக செயல்பட்டதோடு, பொதுச்செயலாளர் ஆனந்துக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கி அதிருப்தியை வெளிப்படுத்தினர். இப்படி அதிருப்தியில் இருக்கும் த.வெ.க.வினர் பட்டியலை மாவட்டம் வாரியாக அறிவாலயம் தயார் செய்திருக்கிறது என்கின்றனர் உடன்பிறப்புகள். அதிலுள்ள நபர்களிடம் பல்வேறு ஆஃபர்களை இறைத்து, தி.மு.கவுக்கு வாருங்கள் என வலைவிரித்து வருகிறார்களாம்.

குறிப்பாக, விழுப்புரத்தில் அதிருப்தியில் இருக்கும் த.வெ.கவினரிடம் பேசிவரும் தி.மு.க தரப்பு, 'தேர்தலுக்கு அப்புறம் இந்த நகராட்சி மாநகராட்சியாக மாற இருக்கிறது. நீங்கள் உங்கள் அணியோடு கட்சிக்கு வந்தால், உங்களுக்கு துணை மேயர் போன்ற பதவிகளை தருகிறோம். அல்லது பசையுள்ள பொறுப்பு வேண்டுமென்றாலும் தருகிறோம்' என ஆஃபர்களை அள்ளி வீசி வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் அறிவாலயம் வீசிய பந்தில் முதல் விக்கெட் காலி ஆகி இருப்பதாகவும் களநிலவரம் சொல்கின்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தெற்கு ஒன்றிய த.வெ.க. செயலாளராக செயல்பட்டு வந்தவர் ஜெகபர்தீன். இவர் த.வெ.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். அவரோடு த.வெ.க. பகுதி பொறுப்பாளர்களும் தி.மு.க.வில் இணைந்து இருப்பது, பனையூரில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

இன்னும் எத்தனை விக்கெட்டுகள் தவெகவில் இருந்து சிதறப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...