லைஃப்ஸ்டைல்

நைட் ஷிப்ட் பணியாளர்கள் கவனத்திற்கு.. புற்றுநோய் ஏற்படும் அபாயம்

தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நைட் ஷிப்ட் பணியாளர்கள் கவனத்திற்கு.. புற்றுநோய் ஏற்படும் அபாயம்
Cancer risk for night shift workers
தற்போதைய காலகட்டத்தில் மனிதர்கள் தூங்கும் நேரம் குறைந்து வருகிறது. இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, உலகளவில் 5 பேரில் ஒருவர் தனது வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். மேலும் 9 ஆண்களில் ஒருவர் மற்றும் 12 பெண்களில் ஒருவர் இந்த நோயால் உயிரிழக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பழக்கங்கள் மற்றும் முறையான உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணிகள் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தூக்கக் குறைபாடும் புற்றுநோய் ஏற்பட முக்கியமான காரணியாக மருத்துவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள் இந்த நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல், உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க முறையான தூக்கம் அவசியம். இது உடல் ஓய்வெடுக்கவும், அடுத்த நாளுக்கு புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது. உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm) தூக்கம், மெட்டபாலிசம், மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. இது இரவு நேரத்தில் மெலட்டோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்ய தூண்டுகிறது. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதுடன், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் கொண்டுள்ளது.

தூக்கமின்மை அல்லது இரவு நேரத்தில் அதிக ஒளி வெளிப்பாடு, குறிப்பாக மின்னணு சாதனங்களிலிருந்து வரும் நீல ஒளி, மெலட்டோனின் உற்பத்தியை குறைக்கிறது. இதனால், புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும், உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் நாள்பட்ட தொந்தரவுகள் மார்பகம், புராஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இரவில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் புல்புகளின் ஒளி வெளிப்பாடு தைராய்டு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் வழிகள்..

தூக்க நேரத்தை ஒழுங்குபடுத்துவதும், தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும் எழுவதும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைகிறது. இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை தவிர்க்கவேண்டும். வீட்டில் உள்ள பிரகாசமான விளக்குகளை குறைத்து பயன்படுத்துவது, மெலட்டோனின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது. இரவு நேரங்களில் நீல ஒளி (Blue light ) வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த செல்போன் மற்றும் லேப்டாப்களை நைட் மோட்-ல் வைத்து பயன்படுத்தலாம். தூக்கத்திற்கு முன் அமைதியான சூழலை உருவாக்கவும். தூக்கக் குறைபாட்டை தவிர்ப்பது, நீண்ட கால ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.