இந்தியா

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மிதக்க விட்ட குடும்பம்!

உத்தரப்பிரதேசதில் பாம்பு கடித்த 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கங்கை ஆற்று நீரில் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மிதக்க விட்ட குடும்பம்!
Uttar pradesh
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில், பாம்பு கடித்த சிறுவனுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல், மூடநம்பிக்கையால் கங்கை நதியில் மூழ்க வைத்ததால் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனைப் பாம்பு கடித்த நிலையில், அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக ஒரு மாந்திரீகிடம் அழைத்துச் சென்றனர். அந்த மாந்திரீகர், சிறுவனை கங்கை நதியில் மிதக்க வைத்தால் விஷம் இறங்கிவிடும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய பெற்றோர், சிறுவனை நதியில் இறக்கி அமானூஷ்யமான செயலில் ஈடுபட்டனர்.

12 மணி நேரப் போராட்டம் - பலியான உயிர்

மாந்திரீகரின் அறிவுரைப்படி, மூங்கில் கழிகளால் செய்யப்பட்ட ஒரு மிதவையில் சிறுவனைக் கட்டி, சுமார் 12 மணி நேரம் கங்கை நதி நீரில் அப்படியே மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தனர். நதி நீரில் உடல் இருந்தால் விஷம் தானாக வெளியேறிவிடும் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம். அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்களும் ஏதோ அதிசயம் நடக்கும் எனக் காத்திருந்தனர். ஆனால், எந்த மாற்றமும் நிகழாமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடரும் அவலங்கள்

இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த 2024-ஆம் ஆண்டு புலந்த்ஷஹர் பகுதியிலும் நடந்துள்ளது. அங்கும் பாம்பு கடித்த 20 வயது இளைஞரை மருத்துவர்கள் இறந்ததாக அறிவித்த பின்னரும், அவரது குடும்பத்தினர் விஷம் இறங்கும் என நம்பி கங்கையில் மூழ்க வைத்தனர். இறுதியில் எந்த மாற்றமும் இல்லாததால் அவரது உடலைத் தகனம் செய்தனர். அவசர காலங்களில் மருத்துவ உதவியை நாடாமல், இதுபோன்ற போலி மாந்திரீகர்களை நம்பி உயிர்களைப் பலிகொடுக்கும் அவலம் இன்னும் தொடர்வதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.