அரசியல்

அதிமுகவினரின் செயல் ஏற்புடையது அல்ல.. ஜவாஹிருல்லா கண்டனம்

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோவுக்கு அதிமுகவினர் தாமதமாக கண்டனம் தெரிவித்தது ஏற்புடையதல்ல என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிமுகவினரின் செயல் ஏற்புடையது அல்ல.. ஜவாஹிருல்லா கண்டனம்
Jawaharullah MMK
மதுரையில் நடைபெறவுள்ள மனிதநேய மக்கள் கட்சி மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 7.18 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளதால் கூடுதலான தொகுதிகளை கேட்போம்.

திமுகவாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி எதிர் அணியில் இருக்கின்ற அதிமுகவாக இருந்தாலும் சரி என்கின்ற சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் பொதுவாக வைக்கின்ற கோரிக்கையாகும்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் "இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 200 கோடியாக உயர்ந்து உள்ளது" என்று அண்ணாமலை கூறியிருந்தார். அந்த புள்ளி விவரம் தவறானது. நாளடைவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கான ஆதாரத்தை நான் வைத்துள்ளேன்.

மேலும் அந்த மாநாட்டில் அண்ணா, பெரியார் பற்றி ஒளிபரப்பிய வீடியோ குறித்து அந்த நிகழ்ச்சியில் மேடையில் இருந்த அதிமுகவினர் உடனடியாக வாய் திறந்து பதில் அளிக்காமல் தாமதமாக கண்டனம் தெரிவித்தது ஏற்புடையது அல்ல. அண்ணா, பெரியார் ஆகியோரால் தான் தமிழகத்தில் சமூக நீதி தழைத்து ஓங்கி நிற்கிறது. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு வகை அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த வரலாற்றை எல்லா வகையிலும் மாற்றுவதற்காக தான் பாஜக விரும்புகிறது. பாஜகவிற்கு, அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து உள்ளது. அந்த நிகழ்வுகளைதான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

வக்பு சட்டம் குறித்து பேசிய அவர், “திமுக மற்றும் காங்கிரஸ் செய்தது போல அதிமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட காட்சிகள் எதிர்த்து வாக்களித்து இருந்தால் வக்பு வாரிய திருத்த சட்டம் நிறைவேறி இருக்காது” எனக் கூறினார்.