அரசியல்

அதிமுக - பாஜக கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கு.. வானதி ஸ்ரீனிவாசன்

அதிமுக - பாஜக கூட்டணி மிக உறுதியாக இருப்பதாகவும் இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கு.. வானதி ஸ்ரீனிவாசன்
Vanathi srinivasan
கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி அன்றில் இருந்து இன்று வரை ஒரே குடும்ப உறுப்பினர்களை முன் நிறுத்தி அதிகாரத்தை அவர்கள் கையில் வைத்துக் கொண்டதற்கான ஆதாரம் தான் இந்த நெருக்கடி. அந்த அதிகார பசிக்காக கோடிக் கணக்கான இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்” என்றார்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எதுவும் செய்வதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ் நசுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து திராவிட கட்சிகள் முன் வைக்கிறார்கள். சமஸ்கிருதம் என்பது இந்த நாட்டில் யாருக்கு தாய் மொழி ? யாருக்குமே தாய் மொழி கிடையாது.. சமஸ்கிருதம் ஒரு பாரம்பரியமான பழமையான மொழி. நமக்கெல்லாம் தாய் மொழியாக உள்ளது.

ஆனால் சமஸ்கிருதம் பல்வேறு செழுமைகளை கொண்டு இருக்கக் கூடிய பழமையான இந்திய மொழி. அப்படி இருக்கையில் சமஸ்கிருதத்திற்காக பாஜக மட்டும் பணம் ஒதுக்கவில்லை, காங்கிரஸ்மே ஒதுக்கியது. ஏனென்றால் அந்த மொழி, குறிப்பிட்ட மக்களுக்கு சொந்தமான மொழி அல்ல. தாய் மொழியை காப்பாற்ற வேண்டும் என்றால் சொந்தக்காரர்கள் அதை காப்பாற்ற வேண்டும். ஆனால் இன்று எத்தனை பள்ளிக் கூடங்களில் தாய்மொழி வழி கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது? அனைவரும் வேறு மொழி கல்வி படிக்கக் கூடிய சூழல் உருவாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பாஜக - அதிமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக - பாஜக கூட்டணி மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதை எந்தவித சக்தியாலும் உடைக்க முடியாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி” எனத் தெரிவித்தார்.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “தமிழகத்தில் போதை கலாச்சார தலை தூக்கி இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அதன் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்குமே அதைப் பற்றிய கவலை இருக்கிறது அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதைத் தாண்டி இதற்கு என்று தனியாக, அமைப்புகள் இருந்தாலும் கூட, அவர்கள் இந்த போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.