அரசியல்

மக்கள் ஆதரவு பெருகப் பொறுப்பும், கடமையும் கூடுகிறது: மு.க.ஸ்டாலின்

“மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்” என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் ஆதரவு பெருகப் பொறுப்பும், கடமையும் கூடுகிறது: மு.க.ஸ்டாலின்
M.K.Stalin
“மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்” என்று ‘உடன் பிறப்பே வா’ கூட்டத்தில் திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா! எனும் தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுக்கு உற்சாகமூட்டி, புத்தகங்கள் வழங்கி கலந்துரையாடி தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடனான பல பழைய பசுமையான நினைவுகளை நிருவாகிகள் நினைவுப்படுத்தி மகிழ்ந்தார்.

திமுக நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது, மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக் கேட்டறிந்தார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்து கொள்ளும் அளவிற்கு தாங்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், மாணவ- மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி திமுக அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

திமுக தலைவர், நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களைச் சந்திக்கும்போது, அவர்களிடம் தந்தை பெரியாரின் சமூகநீதி வழியிலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல், பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த பாதையிலும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன் எனும் வழியில் அணுக வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்க வேண்டும்.

குறிப்பாகப் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற மக்களின் பேராதரவு பெற்ற திட்டங்களையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித சுணக்கமுமின்றி விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியபோது, முதலில் அவர்களின் சொந்த தொழில், விவசாயப் பணிகள், குடும்ப நிலவரங்கள், அவர்களது வேலைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், அவர்கள் பகுதிகளில் உள்ள பொதுநல கோரிக்கைகளான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களை நிர்வாகிகளின் முன்னிலையிலேயே தொடர்புகொண்டு பல கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நிர்வாகிகள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல; உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வரும். இந்த வெற்றியை பெற்றுத்தர நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.