அரசியல்

தேமுதிக-விற்கு சீட் இல்லை..! 2 சீட்டையும் தூக்கிய அதிமுக..! எடப்பாடி போடும் கணக்கு என்ன?

அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.

தேமுதிக-விற்கு சீட் இல்லை..! 2 சீட்டையும் தூக்கிய அதிமுக..! எடப்பாடி போடும் கணக்கு என்ன?
தேமுதிக-விற்கு சீட் இல்லை..! 2 சீட்டையும் தூக்கிய அதிமுக..! எடப்பாடி போடும் கணக்கு என்ன?
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், அந்த பதவிக்கு யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்தமுள்ள 6 சீட்டில் 4 திமுக வசமும், 2 அதிமுக வசமும் உள்ளது.

இந்த நிலையில், தன்னிடம் உள்ள 4 சீட்களுக்கான வேட்பாளர்களாக, ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி ஆக உள்ள வழக்கறிஞர் வில்சன், சேலம் திமுக மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், எழுத்தாளர் சல்மா ஆகியோரை அறிவித்தது திமுக தலைமை. மேலும் மக்களவை தேர்தலின் போது செய்துகொண்ட கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனையும் வேட்பாளராக அறிவித்துள்ளது திமுக.

இப்படி திமுக தன்னுடைய எம்.பி. வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அதிமுகவிடம் உள்ள 2 எம்.பி சீட்களுக்கு யாரை களமிறக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த லிஸ்டில் மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் மனோ மற்றும் நடிகை விந்தியா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவரான தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் இன்பதுரை ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த வழக்கறிஞர் இன்பதுரையை பொறுத்தவரை, திமுக அறிவித்துள்ள வில்சனுக்கு எதிராக களமிறக்கப்படுவதாகவும், வில்சனை போல அவரும் வழக்கறிஞர் என்பதோடு, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராகவும் உள்ளதால் இவர் சரியான சாய்ஸ் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு சீட்டையும் அதிமுகவே எடுத்துக் கொண்டுள்ளதால் தங்களுக்கு ஒரு சீட் கன்ஃபார்ம் என்றிருந்த தேமுதிக, உச்சக்கட்ட ஷாக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, இந்த இரண்டு சீட்டில் ஒரு சீட் தேமுதிகவிற்கு என்று சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியார் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தார். இதனால் தேமுதிக கடும் அப்செட்டானதோடு, எடப்பாடியாருக்கு கூட்டணி குறித்த குடைச்சலை கொடுக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் தேர்தல் நெருங்குவதால், தேமுதிகவிற்கு கொடுத்தால் பாமகவும், பாமகவிற்கு கொடுத்தால் தேமுதிகவும், இவர்களுக்கு கொடுத்தால் பாஜகவும் கேட்கும் என்பதால், தாங்களே இரண்டையும் வைத்துக் கொள்கிறோம் எடப்பாடியார் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.

சரி அப்செட்டில் உள்ள தேமுதிகவை என்ன செய்யப்போகிறார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருகிறது என்றும், தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் தரப்படவில்லை என்றாலும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் தரப்படும் என்றும் அதிமுக தலைமை உறுதியளித்துள்ளது.

தேமுதிக-விற்கு இந்த முறை சீட் இருக்கு என்று சொன்னால், மற்ற கட்சிகள் தங்களிடம் டிமாண்ட் வைப்பார்கள், ஒருவேளை தேமுதிகவிற்கு சீட் இல்லை என்று சொன்னால் கூட்டணியை விட்டு விலகிச் செல்வார் பிரேமலதா என்பதால், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளவே, அடுத்த ஆண்டு தேமுதிகவிற்கு ராஜ்ய்சபா சீட் கன்ஃபார்ம் என்றிருக்கிறார் எடப்பாடியார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

எனவே, தேமுதிகவுடனான பஞ்சாயத்து இதன் மூலமாக அதிமுக முடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிரேமலதா இதற்கு என்ன மாதிரியான எதிர்வினை ஆற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.