அரசியல்

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு
DMK is the one who destroyed Tamil - H.Raja
ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக மருது பாண்டிய மன்னர்களால் 223 ஆண்டுகளுக்கு முன்பு ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிடப்பட்ட நாளை ஒட்டி, திருச்சியில் இன்று மருது சகோதரர்கள் உருவப் படத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எச்.ராஜா, "இந்து விரோத நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வரும் திமுக அரசு 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இருக்காது. அதற்குப் பிறகு ஒரு வருடத்தில் திமுகவே இருக்காது. திமுக சிதைந்து சின்னாபின்னமாகும். தீய சக்திகள் நசுக்கப்பட வேண்டும் என்பது தேசபக்தர்கள் முடிவு எனவே, தேசபக்த உணர்வோடு இனி விளையாட வேண்டாம்" என்று எச்சரிக்கை விடுத்தார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "திருச்சியில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விசிக மாநாட்டில் நாட்டிற்கு எதிராகவும் பிரிவிணைவாதத்திற்கு எதிராகவும் பேசியவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, ஜம்புத்தீவு பிரகடனத்திற்கு மைக் வைக்ககூட போலீசார் அனுமதி மறுப்பது என்பது தமிழின துரோகி, தமிழ் இனத்தின் எதிரிகள், இந்து மத விரோதிகள் இந்த தமிழக அரசாங்கம்" என்றார்.

மேலும், "திமுக இஸ்லாமிய அமைப்புகளின் எடுபிடிகள் என்பதால் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். இந்துவிரோத, தேச விரோதத்திற்கு எதிராக செயல்படுவதை நிறுத்தாவிட்டால் நிறுத்தப்படுவீர்கள்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் நெருங்கும்போது தான் திமுகவுக்கு தமிழ் ஞாபகம் வருகிறது. அமித்ஷா மதுரை வந்தபோது கூட மருத்துவ மற்றும் பொறியியலில் தமிழில் பாடத்திட்டம் கொண்டு வருவேன் என கூறியுள்ளார். தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்பட வேண்டும். தற்போது தமிழை சரியாக எழுதபடிக்ககூட தெரியாதநிலை உள்ளது. தமிழை அழித்தவர்கள் திமுகவினர், அதற்கு முழுபொறுப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உண்டு" எனக் கூறினார்.

மேலும், சீமான் பனைமரத்தில் ஏறி கள் இறக்கியது குறித்த கேள்விக்கு, "பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே கள் இறக்க அனுமதி கொடுப்போம் என தெரிவித்திருந்தோம். ஆகவே கள் இறக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை சரிதான். தமிழ்நாட்டில், விவசாயிகளிடம் கள் இறக்குவதற்காக பணம் பெறுவது எளிதல்ல என்பதால் கள்ளுக்கு தடைவிதித்துள்ளது.