அரசியல்

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!
In a Tense Situation Armstrong Wife Porkodi Meets Poovai jagan moorthy Daughter
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே ஆண்டரசன் பேட்டை பகுதியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தியின் இல்லத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரின் மனைவி பொற்கொடி நேரில் வருகை தந்துள்ளார்.

பூவை ஜெகன் மூர்த்தியினை போலீசார் தேடி வரும் நிலையில், அவரது மனைவி மற்றும் மகளிடம் நேற்று காவல்துறையினர் நடந்த கொண்ட விதம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரை மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடியுள்ளார். அதனைத்தொடர்ந்து இருவருக்கும் தனது ஆதரவை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்த சந்திப்பின் போது பொற்கொடி தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் வந்திருந்தார் குறிப்பிடத்தக்கது.

முன்ஜாமின் கோரிய ஜெகன்மூர்த்தி:

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த களாம்பாகத்தை சேர்ந்த இளைஞர் தனுஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ஶ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாகியுள்ளனர்.

காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கலாம்பாக்கதிற்கு வந்த கும்பல் ஒன்று வீடு புகுந்து மிரட்டல் விடுத்ததோடு தனுஷின் தம்பி சிறுவனை அந்த கும்பல் அடித்து போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த வாகனம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் பெண்ணின் தந்தை வனராஜா, மணிகண்டன், கணேசன், சரத்குமார், ஓய்வு பெற்ற முன்னாள் SI மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைப்பெற்ற விசாரணையில் கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கூலிப்படையினரை வைத்து சிறுவனை கடத்தியதாக தெரியவந்தது. இதன் அடிப்படையில் பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன்பேட்டை பகுதியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியின் வீட்டிற்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அவரை கைது செய்ய வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெகன் மூர்த்தியை கைது செய்யப்போவதாக எழுந்த தகவல் காட்டு தீ போல் பரவிய நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரட்சி பாரத கட்சியை சேர்ந்த தொண்டர்கள் குவிந்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும் புரட்சி பாரத கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கூடியதால் அவரை கைது செய்து அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

தொண்டர்களின் முற்றுகையால் அதிவிரைவு படை போலீசார் ஜெகன்மூர்த்தி இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு வரவழைக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதனைத் தொடர்ந்து ஆவடி காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் ஜெகன் மூர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்த சோதனை செய்தனர். ஆனால் ஜெகன் மூர்த்தி வீட்டில் இல்லை என்பதால் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தற்போது ஜெகன்மூர்த்தி எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பூவை ஜெகன்மூர்த்தி தரப்பில் முன்ஜாமின் கோரப்பட்டுள்ள நிலையில், இந்த மனு மீது நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.