அரசியல்

படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பது எப்படி? அப்செட்டிலும் தளராத ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால் தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பது எப்படி? அப்செட்டிலும் தளராத ராமதாஸ்
pmk founder Ramadoss pressmeet
பா.ம.க.வில் முகுந்தனால் ஆரம்பித்த பஞ்சாயத்து, அன்புமணியின் தலைவர் பதவியைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது. கட்சி யார் கண்ட்ரோலில் உள்ளது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில், பாமக சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஒன்றாக பங்கேற்ற நிலையில், யப்பாடா..பிரச்சினை ஓய்ந்தது போல என பெருமூச்சு விட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ராமதாஸ்.

மைக் ராமதாஸ் பக்கம் வந்ததும் மறைமுகமாக அன்புமணியை சாடி தன் மனதிலிருந்த கருத்துகளை பறக்கவிட்டார். இந்த மாநாட்டிலும் அப்பா – மகன் இடையேயான பிரச்னை மேடையில் அது வெளிப்பட்டதால் பாமகவினர் கடும் அப்செட்டாகினர். யாரால் இன்று அப்பா – மகனுக்குள் மோதல் உருவானதோ, அதே முகுந்தனை மீண்டும் தூக்கிபிடிக்கத் தொடங்கியுள்ளார் ராமதாஸ் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

மாநாட்டை புறக்கணித்த அன்புமணி பாய்ஸ்:

இந்நிலையில் தான், இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்த நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை ராமதாஸின் மகனான அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்தனர்.

யார் வந்தால் என்ன? வரவில்லை என்றால் என்ன? இந்த கூட்டத்தை நடத்தியே தீருவேன் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ். பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ், ”செயல்தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் மாமல்லபுரம் மாநாடு களைப்பில் இருப்பதால் சிலர் இந்த கூட்டத்துக்கு வரவில்லை என்றும்” கூறினார்.

படுத்துக் கொண்டே வெல்வது எப்படி?

தொடர்ந்து பேசிய ராமதாஸ், ”சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைந்துவிடாது என்றும், பாமக நிச்சயம் கூட்டணி அமைத்துப் போட்டியிடும். ஒருவேளை தனித்து நின்று போட்டியிட்டாலும் கூட 40 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மேலும், 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெல்வது எப்படி என்பதை இந்த கூட்டத்தில் என் அனுபவத்தின் வாயிலாக செல்லி இருப்பதாகவும்” தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸூக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்திருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது. சீனியர்கள் ராமதாஸூக்கு ஆதரவாக கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். ஆனால் ஜூனியர்கள் அன்புமணிக்கு ஆதரவாக கூட்டத்தில் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். ஆனால், நேற்றைய தினம் அன்புமணி ராமதாஸ் மாநாடு வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.