அரசியல்

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
கோவை மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

பன்னீர் உற்பத்தி தொழிற்சாலை

கோவை ஆர்.எஸ் புரத்தில், ஆவின் சார்பில் பன்னீர் கட்டு விற்பனை மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்தமுறை கோவை வந்தபோது பன்னீர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை திறந்து வைத்தார். தற்போது அந்த தொழிற்சாலையில் உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது.

கோவை மக்கள் கோரிக்கையை ஏற்று பன்னீர் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை மையம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.

மக்களிடம் நல்ல வரவேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் விநியோகத்தை ஆவின் விநியோகம் செய்து வருகிறது. முதலமைச்சர் ஆலோசனையால் ஆவின் வளமான துறையாக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு நான் அமைச்சராக இருந்த போது ஆவின் டெலிட் என்ற பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. இது நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த பாலை பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

தனியார் பால் விலையை நிர்ணயம் செய்வதை பால்வளத்துறை செய்ய முடியாது. ஆனால் எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும் ஆவின் பக்கம் மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேண்டும். தனியார் பால் கொள்முதலில் சீசனுக்கு தகுந்தார் போல் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் ஆவின் விலை எப்போதும் நிரந்தரமானது.

உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டார்

எனவே அனைத்து விவசாயிகளும் ஆவின் பக்கம் வர வேண்டும் என்று அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஏதாவது புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தால் அதை சரி செய்ய whatsapp குழு அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை 40 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் தமிழகத்தின் தேவைகளை எடுத்துக்கூறி பெற்றுத்தருவார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறும் விபரங்கள் சரியல்ல. முதலமைச்சர் தமிழக உரிமை விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய மாட்டார்” என தெரிவித்தார்.