விளையாட்டு

IPL 2026: முதல் மேட்சே இப்படியா? ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

IPL 2026: முதல் மேட்சே இப்படியா? ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!
Shreyas Iyer fined
ஐபிஎல் 2026 சீசனின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றாலும், மெதுவான ஓவர் வீதத்திற்காக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, இந்த சீசனில் இது அந்த அணியின் முதல் தவறு என்பதால் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஒருவேளை இதே தவறு மூன்றாவது முறை தொடர்ந்தால், கேப்டன் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான ஆட்டமும் பஞ்சாப் வெற்றியும்

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் வைஷாக் விஜயகுமார் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இணைந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். பின்னர் 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ், 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இளம் வீரர் கூப்பர் கான்லி அதிரடியாக ஆடி 72 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயரின் காயம்

ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி இந்தப் போட்டியில் சிறப்பாக அமைந்தது. கில் மற்றும் பட்லர் போன்ற ஜாம்பவான்கள் அதிரடி காட்ட முடியாதபடி அவர் வகுத்த வியூகங்கள் பலன் அளித்தன. இருப்பினும், பேட்டிங் செய்தபோது பந்து தாக்கியதில் ஸ்ரேயாஸின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் மைதானத்திலேயே துடித்தது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காயத்தின் காரணமாக, வரும் வெள்ளிக்கிழமை சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் அவர் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.