தமிழ்நாடு

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு!
Rajya Sabha members
தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை இடங்களுக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், இன்று முறைப்படி நாடாளுமன்றத்தில் பதவியேற்று கொண்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். வேறு யாரும் போட்டியிடாத நிலையில், அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், புதிய உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

திமுக தரப்பில் மூத்த தலைவர் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பதவியேற்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 6 உறுப்பினர்களுக்கும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.