தமிழ்நாடு

போலீசார் பிடியில் நடிகர் கிருஷ்ணா.. போதைப் பொருள் தொடர்பாக விடிய விடிய விசாரணை!

போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

போலீசார் பிடியில் நடிகர் கிருஷ்ணா.. போதைப் பொருள் தொடர்பாக விடிய விடிய விசாரணை!
Actor Krishna Faces Over 15 Hours of Interrogation in Drug Probe
போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் நண்பரான சேலத்தை சேர்ந்த பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழ் சினிமாத்துறையினை சார்ந்த பலருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் ஶ்ரீகாந்த்தினை தொடர்ந்து பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கழுகு பட புகழ் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்வதற்காக நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து நடிகர் கிருஷ்ணா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார்.

நடிகர் கிருஷ்ணாவை விசாரணை செய்வதற்கு முன்பாக போலீசார் அவரை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நடிகர் கிருஷ்ணாவை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு நேரில் வந்து நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொண்டார்.

எனக்கு தொடர்பு இல்லை: கிருஷ்ணா விளக்கம்

2018-ம் ஆண்டிலிருந்து நடிகர் கிருஷ்ணாவிற்கு இரப்பை தொடர்பான அலர்ஜி பிரச்சனை இருக்கிற காரணத்தினால் போதைப்பொருள் போன்றவற்றை தான் பயன்படுத்த வாய்ப்பில்லை என காவல்துறையில் நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனக்கு இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அதற்காக மேற்கொண்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் போலீசாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பிரதீப் குமாருக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விசாரணையில் தெரிவித்து உள்ள கிருஷ்ணா, நடிகர் ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு தான் பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனது பெயர் தவறாக இந்த வழக்கில் அடிபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

விடிய விடிய விசாரணை:

நடிகர் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ சோதனை முடிவில் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் செல்போனில் உள்ள தரவுகள், பண பரிமாற்றம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நபர்களோடு நடிகர் கிருஷ்ணாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் உள்ள ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் நடிகர் கிருஷ்ணா இருவருக்கும் இடையில் பண பரிமாற்றம் மற்றும் தொலைபேசி உரையாடல் இருப்பது குறித்து போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.

வீடுகளிலும் தொடரும் சோதனை:

சென்னை பெசன்ட் நகரில் கலாக்ஷேத்ரா காலனியில் ராமச்சந்திரா சாலையில் நடிகர் கிருஷ்ணாவின் வீடு உள்ளது. அவரது வீடு, கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப் பொருள் தொடர்பான விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளதா? என சைபர் போலீசார் உதவியுடன் விசாரணை நடைப்பெற்று வருகிறது.