தமிழ்நாடு

நடிகர் ஸ்ரீகாந்தால் சிக்கும் பிரபலங்கள்...போதைப்பொருள் பயன்படுத்தியது யார் என போலீஸ் விசாரணை

கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் ஸ்ரீகாந்தால் சிக்கும் பிரபலங்கள்...போதைப்பொருள் பயன்படுத்தியது யார் என போலீஸ் விசாரணை
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது
கொகைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பலருக்கு இதில் தொடர்பு உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு

நடிகர் ஸ்ரீகாந்த் எத்தனை ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்தி வருகிறார்? யார் மூலம் எல்லாம் போதைப்பொருள் வாங்கி உள்ளார்? சென்னையில் எந்தெந்த பப், பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளார்? யாருடன் இணைந்து போதைப்பொருளை உட்கொண்டார்? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களுடைய விசாரணையை விரிவுப்படுத்தி உள்ளனர்.

மேலும் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மூலம் வாங்கிய கொகைன் போதைப்பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் யாருக்கெல்லாம் கொடுத்தார்? அதில் திரை உலகினர் எத்தனை பேர்? போன்ற தகவல்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

நடிகர்களுக்கு தொடர்பு?

மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் எந்தெந்த நடிகர்களுடன் சேர்ந்து கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தினார்? என்ற பட்டியலை எடுத்து விசாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த்துடைய வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போதைப்பொருளுக்காக பிரசாத்திற்கு எவ்வளவு பணம் அனுப்பினார். அதேபோல போதைப்பொருளுக்காக வேறு யாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது போன்ற விவரங்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கொகைன் போதைப்பொருள் நடிகர் கிருஷ்ணாவும் உட்கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர் படப்பிடிப்பு விஷயமாக கேரளாவிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. அதனால் சம்மன் கொடுத்து நேரில் வரவழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.