தமிழ்நாடு

அரசு கல்லூரி கேண்டீனில் கொடூரம்: இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் கல்வி கற்கும் வளாகத்திலேயே இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கல்லூரி கேண்டீனில் கொடூரம்: இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
Brutal incident in government college canteen
சென்னையில் கல்வி கற்கும் வளாகத்திலேயே இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடி வந்த பெண்ணை கேண்டீன் உரிமையாளர் உட்பட மூன்று பேர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

மாஸ்டர் வேலைக்கு வந்த முதல் நாளிலேயே விபரீதம்

சென்னை கோட்டூரைச் சேர்ந்த செல்வம் என்பவர், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றின் வளாகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக கேண்டீன் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 20 நாட்களாகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் (57) என்பவர் அதே உணவகத்தில் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே, குணசேகர் அந்த இளம்பெண்ணைக் கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மக்களிடம் சிக்கிய காமுகன்

பாதிக்கப்பட்ட பெண் அலறிய சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு குணசேகரை பிடித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட பெண், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதுதான், இந்த விவகாரத்தில் மறைந்திருந்த பல திடுக்கிடும் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின.

வெளிச்சத்திற்கு வந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை

காவல்துறையினரின் தீவிர விசாரணையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கனவே திருமணமான இரண்டே மாதங்களில் கணவரைப் பிரிந்து பிழைப்பு தேடி சென்னை வந்தவர் என்பதும் தெரியவந்தது. உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே, அதன் உரிமையாளர் செல்வம் அந்தப் பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து செல்வத்தின் நண்பரான கார்த்திக் என்பவரும் அந்தப் பெண்ணைச் சீரழித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து கடைசியாக வேலைக்குச் சேர்ந்த மாஸ்டர் குணசேகரும் அதே கொடூரத்தைச் செய்துள்ளார்.

போலீசார் அதிரடி நடவடிக்கை

ஒரே பெண்ணைத் தொடர்ச்சியாக மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்த சைதாப்பேட்டை போலீசார், கேண்டீன் உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக் மற்றும் ஊழியர் குணசேகர் ஆகிய மூவரையும் உடனடியாகக் கைது செய்தனர். கல்லூரி போன்ற பாதுகாப்பான இடங்களில் இது போன்ற அத்துமீறல்கள் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.