தமிழ்நாடு

கடைகளை 10 மணிக்கெல்லாம் பூட்ட சொல்வதை ஏற்க முடியாது: ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி!

தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கடைகளை 10 மணிக்கெல்லாம் பூட்ட சொல்வதை ஏற்க முடியாது:  ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி!
A.M.Vikrama Raja- pressmeet at tiruvannamalai
திருவண்ணாமலைக்கு வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

”திருவண்ணாமலை மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற மாவட்டமாகும், அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பல்வேறு சாலை சீரமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு துரிதமாக எடுத்து வருகிறார். அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்

திருவண்ணாமலைக்கு வருகிற மக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இட வசதிகள் இல்லாததால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் நிறுத்துவதற்கு என சரியான இடத்தை தேர்வு செய்து அமைச்சர் வழங்க வேண்டும். வாகனங்கள் எல்லாம் நகரத்திற்குள் வர முடியாத நிலையில் உள்ளது. ஆகவே அரசு, வாகனம் நிறுத்துவதற்கு என இடவசதியை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். மேலும் வர கூடிய வாகனங்களின் போக்குவரத்து இடையூறுகளை சீர் செய்வதற்கு என போதுமான அளவிற்கு போக்குவரத்து போலீசாரை அதிகப்படுத்தி தர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதே போன்று நகை அடகு வைத்தவர்களுக்கு அதனை திரும்ப பெறுவதற்கு பல்வேறு சட்டங்கள் போடப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தை கட்டாயம் திருத்தம் செய்ய வேண்டும். வருகிற ஜூலை 22, 23-ந் தேதிகளில் கொடைக்கானலில் மாநிலத்தினுடைய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்தி அரசு முறைப்படுத்த வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்களை எடுக்க இருக்கிறோம்.

கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தையும் அறிவிப்பதற்கு தயாராக இருக்கிறோம். வணிகர்களின் பாதுகாப்பு என்பது பல இடங்களில் அச்சுறுத்தல்கள் இருந்தாலும் போர்கால அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் கட்சிகள் மாநாடு, கூட்டங்கள் நடத்தும் போது அந்த பகுதியில் உள்ள கடைகளை மூட சொல்லும் நிலைபாட்டினை திரும்ப பெற வேண்டும்” என்றார்.

வணிகர்கள் தங்கள் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பதை முறைப்படுத்தி வருகின்றோம். இதற்காக அரசும், பேரமைப்பு நிர்வாகிகளையும் இணைத்து கொண்டு கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்பதில் 100 சதவீதம் வணிகர் பேரமைப்பு உறுதியாக உள்ளது. அதற்கான பணி விரைந்து நடைபெறும். மேலும் தமிழக முதல்- அமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும் போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக வேறுபடுவதை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக காவல் துறை இயக்குனரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். திறந்து இருக்கின்ற கடைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டுமே தவிர கடைகளை மூடுங்கள் என்ற உத்தரவு இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.