தமிழ்நாடு

சோசியல் மீடியாவில் லாக் போடாத பெண்கள் தான் டார்கெட்- வசமாக சிக்கிய நபர்

பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.

சோசியல் மீடியாவில் லாக் போடாத பெண்கள் தான் டார்கெட்- வசமாக சிக்கிய நபர்
cybercrime police arrest man for harassing women online in multiple fake accounts
காவல்துறை மேற்கு மண்டலம் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் பக்கத்தின் வாயிலாக அறிமுகமாகிய சரவண விக்ரம் என்ற நபருடன் நட்பாக தொலைபேசி மூலமாகவும், மெசேஞ்சரில் குறுஞ்செய்திகள்,வீடியோ கால், ஆடியோ கால் என பேசி பழகி வந்துள்ளார் அந்த பெண்.

பாலியல் துன்புறுத்தல்:

இந்த நிலையில் சரவண விக்ரம் அந்த பெண்ணை, அவரது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை யாருடனும் தொலைபேசியில் பேசக் கூடாது என்றும் தன்னுடன் மட்டுமே தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சரவண விக்ரம் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார். அதனால் அவர் சொல்லும் போது எல்லாம் வாட்ஸ் அப் வீடியோ காலில் வர வேண்டும் என்றும், ஆபாசமாக வாட்ஸ் அப்பில் சில வீடியோக்களை அனுப்பி அதன்படி செய்ய வேண்டும் என்றும் வாட்ஸ் அப் வழியாகவே அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது.

தனக்கு இரண்டு மகள்கள் இருப்பதால் இதனால் பிரச்னை ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் சரவணன் உடனான தொடர்பை துண்டித்து அவரது தொலைபேசி எண்ணை பிளாக் செய்து புதிய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வந்துள்ளார் அந்த பெண். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சரவண விக்ரம் அப்பெண்ணின் அக்காவின் முகநூல் பக்கத்தினை அடையாளம் கண்டு அவர்களிடம் அப்பெண்ணின் தொலைபேசி எண்ணை கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்படி தரவில்லை என்றால், அவரது புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் மார்பிங் செய்து வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதற்கு பயந்து, அப்பெண்ணின் தொலைபேசி எண்ணை அவரது அக்கா கொடுத்துள்ளார். இதன் பின் தான் இன்னும் கொடூரமாக நடக்கத் தொடங்கியுள்ளார் சரவண விக்ரம். ஏற்கெனவே பேசி வந்த பெண், அவரது அக்கா, அவர்களது மகள்களையும் ஆபாசமாக பேசி தன்னுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தன் ஆசைக்கு இணங்கவில்லை என்றால், நீங்கள் முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படங்களை மார்பிங் செய்து
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும், கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

போலி பெயரில் பாலியல் தொல்லை:

இந்த புகார் தொடர்பாக மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டும் நபர் குறித்த தகவல்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து வாங்கி தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அவருடைய செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் கணினி ஐபி முகவரியை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், போலி சமூக வலைதளக்கணக்கு ஆரம்பித்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சரவணன் விக்ரம் என்ற பெயரில் ஏமாற்றிய நபரான தூத்துக்குடியைச் சேர்ந்த கோபியை (42) தூத்துக்குடியில் அவரது வீட்டின் அருகில் வைத்து சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கோபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளாக FaceBook, Instagram போன்ற சமூக வலைதளங்களில் உள்ள பெண்களின் ID-களுக்கு ப்ரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து, அவர்கள் நட்பாக ஏற்றுக்கொண்டவுடன் சமூக வலைதள பக்கத்தில் உள்ள பெண்களின் போன் நம்பர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பி இரவு நேரங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் செய்வதை வழக்கமாக வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எட்டாம் வகுப்பு படித்துள்ள நிலையில், தேங்காய் வியாபாரம் செய்யும் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் கோபி. சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பில்லாத முறையில் வெளிப்படையாக தகவல்களை வைத்திருக்கும் பெண்களை மட்டும் குறிவைத்து பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான கோபி மொத்தம் 5 FaceBook ID's, 9 Instagram ID-யினை பயன்படுத்தி வந்துள்ளார்.

இதுபோன்று எத்தனை பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார் என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட கோபி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.