தமிழ்நாடு

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
E.V.Velu ask questions to EPS
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் துறைமுக பகுதியில், ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று திறந்து வைத்தார். பின்னர், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டிடத்தைப் பார்வையிட்ட அமைச்சர், அதனைத் தொடர்ந்து 6 கிலோ மீட்டர் தூரம் புதிதாக அமைய உள்ள ராமேஸ்வரம் புறவழிச் சாலைப் பணிகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார்.

ரூ.7.81 கோடி மதிப்பீட்டில் 120 மீட்டர் நீளம் கொண்ட மிதக்கும் பாலம் அமைக்கும் பணிகளையும் அக்னி தீர்த்த கடற்கரையில் பார்வையிட்ட அமைச்சர், அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

தலைமன்னார் கப்பல் போக்குவரத்து & பாம்பன் கால்வாய் தூர்வாருதல்

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கப்பல் போக்குவரத்தைச் செயல்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறினார்.

பாம்பன் கால்வாய் தூர்வாருதல் தொடர்பாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில், முதல்வரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு, விரைந்து மத்திய அரசிடம் நிதியைப் பெற்று கால்வாய் ஆழத்தைத் தூர்வாரி மீனவர்கள் நலனுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய பாம்பன் சாலைப் பாலம்

தொடர்ந்து பேசிய அவர், பாம்பன் கடலில் புதிய சாலைப் பாலம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்ததில், புதிய சாலைப் பாலம் வழித்தடம் அமைப்பதால் பாம்பன் பகுதியில் பல வீடுகள் சேதமடைய அதிக வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து, வழித்தடத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தி புதிய பாம்பன் சாலைப் பாலம் அமைப்பதற்கான திட்டப்பணிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைந்து மத்திய அரசின் நிதி உதவி பெற்று புதிய பாம்பன் சாலைப் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?

நான்காயிரம் கோடி கடன் வாங்கியதுதான் தமிழக அரசின் நான்காண்டு சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, "சாதனை பெற்றதில் ஒரு அரசாங்கம் சமூகப் பணிகளைச் செய்யும்போது கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். எனது நண்பர் எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? எந்த ஒரு அரசும் மக்களின் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்குக் கடன் வாங்கத்தான் செய்யும். ஆனால், கடனைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசு கடனைக் கட்டுக்குள் வைத்துள்ளது" என தெரிவித்தார்.