தமிழ்நாடு

தோசையில் விஷம் கலந்து சாப்பிட்ட குடும்பம்.. கடன் தொல்லையால் விபரீதம்

சேலம் அருகே கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் கலந்த தோசையை சாப்பிட்டு, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோசையில் விஷம் கலந்து சாப்பிட்ட குடும்பம்.. கடன் தொல்லையால் விபரீதம்
Family eats poisoned dosa
சேலம் மாவட்டம், எடப்பாடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாலாஜி (35). இவர் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி புனிதா (28). இவர்களுக்கு தேவாஸ்ரீ (8), சபிதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், நான்கு பேரும் நேற்று இரவு வீட்டில் தோசையில் விஷம் கலந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தனது சகோதரருக்கு செல்போனில் அழைத்த பாலாஜி, கடன் தொல்லையை தாங்க முடியாத விரக்தியில் அனைவரும் தோசையில் விஷம் கலந்து சாப்பிட்டதாக கூறியுள்ளார். உடனடியாக பாலாஜியின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அனைவரும் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நான்கு பேரையும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தில் கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).