தமிழ்நாடு

விவசாய கடன் பெற சிபில் ஸ்கோர்.. உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் சிபில் பிரச்சனை காரணமாக திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விவசாய கடன் பெற சிபில் ஸ்கோர்.. உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
Cancel CIBIL score order for agricultural loans - Farmers association demands
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 26 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர், விவசாயிகள் கடன் அட்டை (Kissan Credit Card) மூலம் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு விவசாயிகளின் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாத சூழல்:

தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பயிர் கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நெல்லுக்கு ஒரு ஏக்கர் பயிர் செய்ய 76 ஆயிரம் ரூபாய் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு செலவாகிறது, ஆனால் தமிழ்நாடு அரசு ரூ. 36,000 மட்டுமே பயிர் கடனாக வழங்கி வருகிறது. எனவே கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக, விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இது போதாமல் வியாபாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும், உரக்கடைகளிடமும் கடன் பெற்றுத்தான் விவசாயத்தை செய்து வருகின்றனர். மத்திய அரசினுடைய புள்ளி விவரங்களின்படி கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் தமிழ்நாட்டு விவசாயிகள் விவசாயத்தில் லாபம் பெற முடியவில்லை, விவசாயிகள் பயிர் கடனை கூட திருப்பி செலுத்த முடியாததால் அவ்வப்போது மாநில அரசும் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது.

ஏற்கனவே விவசாயிகள் விவசாய மூலதன கடன், கோழிப்பண்ணை, விசைத்தறி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சிறு - குறு தொழில்களுக்கும், கல்வி கடன், நகை கடன் ஆகியவற்றை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாததால், செலுத்த முடியாததால், சிபில் ரிப்போர்ட் என்கிற பிரச்சினையில் சிக்கியுள்ளதால் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளின் ஒரே புகலிடமாக உள்ளது. இனிமேல் கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் சிபில் ரிப்போர்ட்டில் பதிவேற்றம் செய்யப்படும், அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இனி விவசாயிகள் பயிர் கடன், குழந்தைகளுக்கு கல்வி கடன் உள்ளிட்ட எந்த கடனையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

விவசாய உற்பத்தியில் பின்னடைவு:

இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தங்க நகை கடன் மீதான கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது என தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து இருந்தார். எனவே இது மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் உத்தரவு என்று சொல்லியும் கூட்டுறவுத் துறை தப்பித்துக் கொள்ள முடியாது என்பது தெளிவாக தெரிய வருகிறது.

ரிசர்வ் வங்கி 2017 KCC கடன் பெறுவதற்கு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே பயிர் கடன் வழங்க வேண்டும் என எவ்வித வழிகாட்டுதலும் கொடுக்கவில்லை. இதேபோன்ற பிரச்சனை மகாராஷ்டிராவில் எழுந்தபோது, மகாராஷ்டிரா முதல்வர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும்போது சிபில் ரிப்போர்ட் பார்க்க கூடாது எனவும், அவ்வாறு பார்க்கும் அனைத்து வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

விவசாய கடன்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சிபில் ரிப்போர்ட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென இந்தியா முழுவதும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்து வரும்போது, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் கொடுப்பதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் மூலமாக சுற்றறிக்கை செய்திருப்பது என்பது ஏற்கனவே விவசாய உற்பத்தியில் பின்னடைவில் இருக்கும் தமிழ்நாட்டில், மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது.

திமுக ஆட்சி மீது அதிருப்தி:

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து படிப்படியாக விரட்டியடிக்கப்படும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் தஞ்சம் அடைவதை தடுத்து, தனியார் நிதி நிறுவனங்களிடமும் சிக்கி மீண்டும் அவர்கள் வாழ்க்கையை சிரமமாக்குவதற்கே இது போன்ற அறிவிப்புகள் உதவும். எனவே கூட்டுறவுத் துறையின் இந்த அறிக்கை விவசாயிகளிடையே தமிழ்நாடு அரசிற்கும், திமுகவின் ஆட்சிக்கும் மிகப்பெரிய அவப்பெயரையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள சூழ்நிலையில் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த கடுமையான அதிருப்தி திமுகவின் எதிர்கால இலக்குகளுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிடும். கூட்டுறவுத்துறை மாநில பதிவாளர் ஏற்படுத்தி உள்ள இந்த பிரச்சனையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அமைதி காப்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் தலையீடு வேண்டும்:

பிரச்சனைக்கு தீர்வு காண கோரி கடந்த 16 ஆம் தேதி அன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 28 மாவட்டங்களில் கோரிக்கை மனு அளித்து கவனயீர்ப்பு இயக்கமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள் பயிர் கடன் - கால்நடை கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற உத்தரவை ரத்து செய்து, கூட்டுறவு சங்கங்களையும், விவசாயிகளையும் காத்திட வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.